குளத்தில் குளித்துக் கொண்டிருந்த சக்கரவர்த்தியின் கமண்டலத்திற்குள் மீன் ஒன்று புகுந்தது. அதை அரண்மனைக்கு எடுத்துச் செல்லும்போது வளர ஆரம்பித்தது கண்டு பயந்து கிணற்றில் விட்டார். அங்கும் வளர ஆரம்பிக்கவே எடுத்து குளத்தில் விட்டார். குளத்திலும் வளரத் தொடங்கியது. பின்னர் கேட்ட அசரீரி வாக்குப்படி ஒரு கட்டுமரம் அமைத்து அதில் அனைத்து ஜீவராசிகளையும், இந்த மீனையும் அதில் விட்டு விட்டார். நிகழப்போகும் பிரளயத்தில் இந்த கட்டுமரத்திலுள்ள ஜீவராசிகள் மீண்டும் பூமியில் விளங்க வழி செய்யும் என அசரீரி மேலும் கூறியது. இந்த புராண வரலாறு நிகழ்விற்கு காரணமான மச்சாவதார மஹாவிஷ்ணுவும் வழிபட்ட மச்சபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள ஸ்தலம்.
அந்நாளில் தேவராயன்பேட்டை என்றிருந்து இப்போது மட்டியான்திடல் எனப்படுகிற ஊர் மற்றும் சேலூர் இரண்டும் சேர்ந்து ஒரே வைப்புத் தலமாகக் கருதப்படுகிறது.