பிரதான கருவறையில் மூலவராக தேவி துர்கா பகவதியம்மன் வடக்கு நோக்கி எழுந்தருளி தரிசனம் தருகிறாள். அன்னையின் சௌந்தர்ய ரூபம் கண்களையும் மனதையும் விட்டு அகலாது. இது வடக்கு நோக்கிய ஆலயம்.
பலவித மூலிகைகளைக் கலந்த சந்தனத்தால் சித்ரா பௌர்ணமி தினத்தன்று அன்னைக்கு காப்பிடுகின்றனர். அதையே பக்தர்களுக்கு பிரசாதமாக விநியோகிக்கின்றனர்.
ஆசியாவிலேயே மிகப் பெரிய நந்தியை இங்கு ஸ்தாபித்துள்ளனர். 31 அடி உயரம், 41 அடி அகலம், 21 அடி நீளம் கொண்ட பெரிய திருமேனி. காலை மடக்கி மண்டியிட்டு அமர்ந்திருக்கும் பிரம்மாண்டமான நந்தி. பிரதோஷ நாட்களில் 500 லிட்டர் பாலை மோட்டார் வைத்து குழாய்கள் மூலமாக பீய்ச்சியடித்து பாலபிஷேகம் செய்கின்றனர்.
கருவறையின் இடது புறமாக கிருஷ்ணரும், வலது புறமாக சிவபெருமானும் எழுந்தருளியுள்ளனர். தென் மேற்கு மூலையில் குரு, கேது, சிவன் கூடிய கன்னி சர்ப்பமான நாககன்னியின் திருவுருவத்தை தரிசிக்கலாம். பின்புறமாக ஆதிசேஷனும், வலப்புறம் தட்சிணாமூர்த்தியும், இடப்புறமாக சிவலிங்கம் மற்றும் பிரம்மா ஆகிய திருவுருவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. நாககன்னி அம்மன் பாம்பு வடிவில் இருக்கிறாள். இவளை வணங்குபவர்களுக்கு அனைத்து சுபகாரியங்களும் நிறைவேறுகிறது.
செல்வ கணபதி, காவல்ராயன், புற்று லட்சுமிநாராயணன், கயிலைநாதன், சனீஸ்வர பகவான் ஆகியோரை வழிபடலாம். 11 அடி உயரம் கொண்ட திருமேனியுடன் புலி வாகனத்தில் அமர்ந்த ஐயப்பன் திருவுருவம் அழகாக இருக்கிறது. இத்தலத்திலுள்ள சனீஸ்வர பகவானை தரிசிப்பவர்கள் சனியினால் வரும் தோஷங்கள் நீங்கப் பெறுவர்.