திருமால் கருமை நிறத்திலிருப்பதால், காயாமலர் போன்ற மேனியைக் கொண்ட பூமிதேவியிடமே அதிகமாக பிரியம் வைத்துள்ளார் எனவும், தான் சிவந்த மேனியைக் கொண்டுள்ளதால் தன்னிடம் அதிக பிரியமாக இருக்கவில்லை எனவும் சலனமடைந்த திருமகள், துர்வாச முனிவரிடம் யோசனை கேட்டாள்.
பூமிதேவியை சிவந்த நிறத்தில் மாற்றி விட்டால் இருவர் மீதும் ஒத்த அன்பு ஏற்படுமென துர்வாசர் யோசனை கூறினார்.
இந்த யோசனையுடன் வைகுண்டம் சென்ற துர்வாச முனிவரை பூமிதேவி கவனிக்கவுமில்லை, உபசரிக்கவுமில்லை.
இதனால் கோபமடைந்த துர்வாசர், "நீ லட்சுமி போல் ஆகக்கடவாய்" என சபித்தார். தனது தவறை உணர்ந்த பூமிதேவி பிராயச்சித்தம் வேண்டினாள்.
தாமிரபரணியின் தென்கரையிலுள்ள ஹரிபத க்ஷேத்ரத்தில் நீராடி, அங்கு தவமிருந்தால் சாப விமோசனம் கிடைக்கும் என்று துர்வாசர் கூறினார்.
ஸ்ரீ பேரை என்பது லட்சுமியின் உடல். ஸ்ரீ பேரை என்ற நாமத்தைத் தரித்துக்கொண்டு பூலோகம் வந்து, எட்டெழுத்து மந்திரத்தை ஜபித்துக்கொண்டு, இத்தலத்தில் தவமிருந்தாள் பூமிதேவி.
பங்குனி மாத பௌர்ணமி தினத்தன்று தீர்த்தத்தில் நிலமகள் நீராடியபோது, மீன்களை ஒத்த வடிவில் மகர வடிவிலான இரண்டு குழைகள் நீரில் கிடைத்தன. இவை திருமாலின் காதுகளுக்கே அழகாகவும் பொருத்தமாகவும் இருக்கும் என்று எண்ணினாள்.
பூதேவியின் தவத்தினால் மகிழ்ந்த திருமால், அவளது விருப்பப்படியே அந்த மகர குண்டலங்களைத் தன் காதுகளில் அணிந்துகொண்டார். இதனால் மகர நெடுங்குழைக்காதர் என்ற திருநாமம் கொண்டார்.
மகரக் குழைகள் தோன்றிய பொருநை தீர்த்தத்திற்கு மாகர தீர்த்தம் எனப் பெயர் வந்தது. மேலும் பூமிதேவி, திருப்பேரை எனும் தனது பெயரிலேயே இத்தலம் விளங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தாள். அவள் பிரார்த்தித்தபடியே இத்தலம் திருப்பேரை என்ற பெயரைக் கொண்டது.
பிரஹஸ்பதியின் சாபத்தால் வருணன் தனது நாகபாசத்தை இழந்தான். பின் இத்தலத்திற்கு வந்து தவம் மேற்கொண்டான். பிரத்யட்சமான மகரநெடுங்குழைக்காதர் இழந்த நாகபாசங்களை மீண்டும் வழங்கினார்.
மழை பொய்த்ததால் பஞ்சத்திற்குள்ளான விதர்ப்ப தேசத்திற்கு சுபிட்சத்தை வழங்க வேண்டி இத்தலம் வந்த விதர்ப்ப தேசத்து அரசன், மகரநெடுங்குழைக்காதரை பூஜித்து தன்னுடைய நாட்டிற்கு வளத்தைப் பெற்றான்.
1971 ஆம் ஆண்டு இவ்வாலயத்து ஊழியர்களின் கனவில் தோன்றிய மகரநெடுங்குழைக்காதர், இப்பகுதியில் கள்வர்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதாக தெரிவித்தார். ஊழியர்கள் விழிப்புடன் இருந்து திருடர்களை பிடித்து விட்டதாக ஆலயக் குறிப்பு ஒன்று கூறுகிறது.