பூவரசங்குப்பம், பரிக்கல், சிங்கர்குடி ஆகிய மூன்று ஸ்தலங்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளன.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் மேற்கே திருமுக மண்டலம் கொண்டு அமர்ந்த கோலத்தில் உக்கிர நரசிம்மராக, சீற்றம் கொண்ட தோற்றத்துடன் பெரிய திருவுருவமாக, நெடிந்துயர்ந்த வடிவத்தில் சேவை சாதிக்கின்றார். பதினாறு திருக்கரங்கள் கொண்ட அழகிய திருமேனி.
சங்கு-சக்கரம், பதாக ஹஸ்தம், குறுவாள், சூலம், கதை, கேடயம், வில் ஆகிய ஆயுதங்களை தனது எட்டுக் கரங்களில் ஏந்தியும், மற்ற எட்டுக் கரங்களைக் கொண்டு அசுரர்களின் தலையைக் கொய்தல், குடலைக் கிழித்தல் போன்ற காரியங்களை செய்து கொண்டும் காட்சி தருகின்றார்.
கீழே இடப்புறமாக இரண்யனின் மனைவி நீலாவதியும், வலப்புறமாக மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோரைக் காணலாம்.
யோக நரசிம்மர்-பால நரசிம்மர் ஆகிய திருவுருவங்களையும் காணலாம். நரசிம்மர் சந்நிதிக்கு இடப்புறமாக உள்ள சந்நிதியில் கனகவல்லித் தாயாரை சேவிக்கலாம். சுக்கிரவார மண்டபத்தில் கனகவல்லித் தாயாரின் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
ஸ்தல விநாயகராக வாசிஷ்ட விநாயகர் எழுந்தருளியுள்ளார். ராஜகோபுரத்தை அடுத்துள்ள சந்நிதியில் கனகதுர்க்கையை சேவிக்கலாம். ஆதியிலிருந்தே இங்கிருப்பவள் என்கின்றனர்.