ஸ்தல வரலாறு:
இயற்கை எழில் சூழ் வனப்பகுதியின் ஊடே ஓடி வரும் முல்லைப்பெரியாற்றின் கரையில் அமைந்துள்ள ஆலயம்.
வனமாக இருந்த இப்பகுதியில் அன்னை உமாதேவி அமர்ந்து தவம் மேற்கொண்டாள். வனத்தில் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்த முனிச்ரேஷ்டர்களை துன்புறுத்தி வந்த அசுரன் ஒருவன் உமையவளை தாக்க முற்பட்டான்.
இதனால் கோபம் கொண்ட தேவி ஒரு புல்லை கிள்ளி அவன் மீது வீசினாள். அது அவனது உடலை இரண்டாக பிளந்து அவனை மாய்த்தது. முனிச்ரேஷ்டர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இங்கேயே கோவில் கொண்டாள் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
ஒருவன் பசுக்களை மேய்த்துக் கொண்டிருந்தபோது, பசு ஒன்றின் கால் புற்றில் இடறியதால், புற்றிலிருந்து ரத்தம் பெருகியது. புற்றை கிளறி பார்த்ததில் சுயம்புவாக அம்மன் காட்சி தந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
மதுரையை ஆண்ட வீரபாண்டி எனும் அரசனின் பெயரால் இவ்வூர் வீரபாண்டி எனப்படுகிறது. அரசன் வீரபாண்டி கண் பார்வையை இழந்து கஷ்டப்பட்டான். அவனது கனவில் தோன்றிய இறைவன் கூறியபடி, இத்தலத்திற்கு வந்து கௌமாரியை வேண்டி ஒரு கண்ணின் பார்வையைப் பெறுகிறான் என ஸ்தல வரலாறு கூறுகிறது.