திருமாலின் வாமன அவதார காலத்தில் பூமி தானத்தின் போது இடையூறு செய்து கண்ணை இழந்த சுக்ராச்சாரியார், இத்தலத்தில் எம்பெருமானைப் பூஜித்து கண்ணொளி பெற்றார். சுக்கிரன் அருள் பெற்றதால் பார்கவ க்ஷேத்ரம், சுக்ரபுரி என்ற பெயர்களைக் கொண்டது. தூய தமிழில் வெள்ளியங்குடி என்றழைக்கப்படுகிறது.
எல்லா நேரங்களிலும் ஒளி வீசும் தூங்கா விளக்காக, சுக்ரன் எழுந்தருளியுள்ளார். சுக்ர தோஷ நிவர்த்தி செய்ய எண்ணெய் வாங்கித் தந்து நேர்த்திக்கடனை நிறைவு செய்கின்றனர். சுக்ரன் வழிபட்டுப் பார்வை பெற்ற ஸ்தலமாதலால், விஷ்ணு சுக்ர ஸ்தலம் என்பர்.
படைப்புத் தொழிலை மேற்கொண்டுள்ளதால் இறுமாப்பு கொண்ட பிரம்மனின் சாத்வீக குணம் தொலைந்து, பதவியையும் இழந்தார். இத்தலத்திற்கு வந்து பிரம்ம தீர்த்தம் ஒன்றை ஏற்படுத்தி, தவம் மேற்கொண்டு, இழந்த பதவியை திரும்பப் பெற்றார்.
கிருதா யுகத்தில் பிரம்மபுரம் என்றும், திரேதா யுகத்தில் பராசரபுரம் என்றும், துவாபர யுகத்தில் இந்திரபுரம் என்றும், கலி யுகத்தில் பார்கவபுரம் என்றும் இத்தலம் விளங்கியதாகக் கூறப்படுகிறது.
விஸ்வகர்மாவைப் போல தானும் கோவில் ஒன்றை கட்ட வேண்டும் என்ற ஆசையிலிருந்த மயன் இத்தலத்தைத் தேர்ந்தெடுத்து இவ்வாலயத்தை நிர்மாணித்தான். மயனின் பிரார்த்தனைக்கிணங்க, கோலவில் ராமனாக எம்பெருமான் சேவை சாதித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. ஸ்ரீ ராமனாக சேவை சாதிப்பதால் தனது கரங்களிலிருந்த சங்கு சக்கரங்களை கருடாழ்வாரிடம் கொடுத்ததால், இங்கு பெரிய திருவடி சங்கு சக்கரங்களுடன் காணப்படுகிறார்.
இங்கிருந்து 1.5 கி.மீ. தூரத்தில், பிரபந்தங்களுக்கு அரிய வியாக்கியானம் எழுதிய பெரிய வாச்சான் பிள்ளை பிறந்த ஸ்தலம் (சேங்கனூர்) உள்ளது. செங்கநல்லூர் கிராமம் மத்தியில் அவர் பிறந்த அக்கிரகாரம் உள்ளது. நினைவுச் சின்னங்கள் எதுவும் வைக்கப்படவில்லை. அவர் ஐக்கியமான இடத்தில் ஸ்ரீநிவாசர் சந்நிதியும், பெருமாள் திருவடிகளருகே அவரது விக்ரஹம் ஒன்றும் உள்ளது.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்றாகும்.