வசிஷ்ட நதிக்கரையோரமாக உள்ள ஐந்து தலங்களில் இது மூன்றாவது ஸ்தலம். இங்கு வசிஷ்ட நதி, ஸ்வேத நதி, மாலையாறு, சிற்றாறு ஆகியன ஆறாய் ஓடுவதால் 'ஆற்றூர்' எனப் பெயர் கொண்டு பின்னர் மருவி 'ஆத்தூர்' என்றானது. முன்பு 'அனந்தகிரி' என்றழைக்கப்பட்டதாம்.
தாம் மேற்கொள்ளவிருக்கும் தவத்திற்கு இடையூறு ஏதும் வராதிருக்க சிவபூஜை செய்யத் தீர்மானித்த வசிஷ்ட மகரிஷி, இத்தலத்திலுள்ள மேடான பகுதி ஒன்றில் புதையுண்டு சுயம்புவாக இருந்த சிவலிங்கம் ஒன்றைக் கண்டு, அதை வெளிக் கொணர்ந்து, பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது. பூஜைக்கு ஏதுவாக தீர்த்தம் ஒன்றையும் அமைத்தார்.
வெளியே பிள்ளையார் கோவில் ஒன்றும் உள்ளது. இங்குள்ள பிள்ளையார் தலையை ஆட்டும் விதமாக இடது புறமாக சாய்த்த நிலையில் காணப்படுகிறார். இதனால் 'தலையாட்டி பிள்ளையார்' என்று அழைக்கின்றனர்.