அசுரர்களால் பாதிக்கப்பட்ட தேவர்களும், முனிவர்களும் பார்வதி தேவியிடம் தஞ்சமடைந்து தங்களை காப்பாற்றும்படி வேண்டினர். சிவபெருமான் நெருப்பு வடிவில் (காத்ர ஜோதி) யோக நிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். அவரது தவத்தை கலைக்க விரும்பாத பார்வதி, ஸ்வர்ணத்தால் இளநீர் ஒன்றை செய்து அவர் முன் வைத்து விட்டு, தானும் தவம் மேற்கொண்டாள்.
அம்பிகையின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவபெருமான், தனது நெற்றிக்கண்ணிலிருந்து ஆறு தீப்பொறிகளை விடுவித்தார். அவை ஒன்றிணைந்து கார்த்திகேயன் தோன்றினார். முருகன் பிறக்க காரணமான இந்த ஸ்தலத்து இறைவனிடமிருந்து புறப்பட்ட தீப்பொறிகளின் காஞ்சனப்பிரகாசம் தோன்றியதால், இவ்வூர் காஞ்சன நகரம் எனப் பெயருற்றது. பின்னர் நாளடைவில் மருவி கஞ்சாநகரம் (பொன் நகரம்) என அழைக்கலாயினர். ஆறுவித ஜோதிகளை நெற்றிக்கண்ணிலிருந்து வெளிப்படுத்தி கார்த்திகா சுந்தரேஸ்வரர் என்றானார். இதுவே நாளடைவில் காத்ரா சுந்தரேஸ்வரர் என்றானது.
ஸ்வர்ண இளநீரிலிருந்து எழுந்த அம்பிகையை திருமணம் செய்து கொண்டார் இறைவன் என ஸ்தல வரலாறு.
மானக்கஞ்சார நாயனார் அவதரித்து முக்தியடைந்த ஸ்தலம்.