மாரி செட்டியாரும் அவரது நண்பரான கந்தப்ப ஆசாரியும் பாத யாத்திரையாக திருப்போரூர் சென்று வழிபடுவது வழக்கம். வெயிலில் நடந்த களைப்பு மேலிட்டதால், வழியிலுள்ள வள்ளியம்மை ஓடையருகே இருவரும் படுத்துத் தூங்கிவிட்டனர். செட்டியாரின் கனவில் தோன்றிய முருகன், தான் ஒரு மரப் பொந்திலுள்ள புற்றில் இருப்பதாகத் தெரியப்படுத்தினார்.
அந்தப் புற்றைக் கிளறிப் பார்த்ததில், அதற்குள்ளிருந்து வெளிப்பட்ட அழகிய சிலையை எடுத்துக் கொண்டார்.
சென்னைக்குத் தூக்கிச் செல்ல ஏதுவாக, சின்னஞ் சிறு பாலகனாக வடிவெடுத்து, லேசான எடைக்கு மாறி, அவர்கள் தூக்கிச் செல்ல முருகன் உதவினார் எனக் கூறப்படுகிறது.
ராசப்ப செட்டித் தெருவிலுள்ள முத்யாலு நாயக்கர் தனக்குச் சொந்தமாக இருந்த பூந்தோட்டத்தைக் கோவில் கட்டுவதற்கு எழுதி வைத்துவிட்டார். மாரி செட்டியார் அவரது மனைவியின் நகைகளை விற்று இக்கோவிலைக் கட்டியதாகக் குறிப்பொன்று கூறுகிறது. இக்கோவில் 1865 ஆம் ஆண்டு கட்டப்பட்டது.