மூலவர்: ஸ்ரீ கைலாசநாதர், அம்பாள்: சிவகாமி அம்மை.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளியுள்ளார் ஸ்ரீ கைலாசநாதர். மாசி மாதத்தில் 9ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை சூரியனின் ஒளிக்கதிர்கள் நந்தியின் கொம்புகள் வழியே ஊடுருவி சுவாமி மீது படர்ந்து சூரிய பூஜை செய்கின்றன. 20 தூண்களையுடைய மகாமண்டபத்திலுள்ளது மூலஸ்தானம்.
சிவ - பார்வதி திருமணமும், திருமால் தாரை வார்த்துக் கொடுத்தலும், கருவறை முகப்பில் சிற்ப வடிவங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.
கருவறையின் வடக்கிலும் தெற்கிலும் சிவகாமி அம்மையும், முருகனும் சந்நிதி கொண்டுள்ளனர். சித்தி விநாயகர் எழுந்தருளியுள்ளார்.
சுவாமி மேற்கு நோக்கியும் அம்பிகை கிழக்கு நோக்கியும் எழுந்தருளியுள்ளனர்.
மகாமண்டபத்து மேற்புறத்தில் ஏழடி சதுர தாமரையும் நடுவேயுள்ள மொட்டில் கல் வளையமும் செதுக்கப்பட்டுள்ளன. இது உருளுகிறது. எட்டு திக்குகளிலும் அஷ்டதிக் பாலகர்களும், தொங்கும் அழகிய கல் சங்கிலிகளும் காணலாம்.
மகாமண்டபத் தூண்களிலுள்ள சிற்பங்கள் பிரமிப்பை ஊட்டுகின்றன. வாலியை நோக்கி அம்பெய்தும் ராமரின் சிற்பம் அற்புதமானது. வாலியின் தூணிலிருந்து பார்த்தால் ராமர் தெரியமாட்டார். ராமர் இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் வாலி மட்டும் தெரிவான். மன்மதன் சிலை இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் சிவ - பார்வதி திருவுருவங்கள் தெரியும். பார்வதி இருக்கும் தூணிலிருந்து பார்த்தால் மன்மதன் தெரியமாட்டான். இப்படி எத்தனையோ அற்புதமான சிற்பங்கள் காணலாம்.
பிரகாரம் முழுவதும் அற்புதமான சிற்பங்கள் - ஒரு யாளியின் வாயில் உருளும் கல், ஆனால் வெளியே எடுக்க முடியாது.
தனி சந்நிதியில் சஹஸ்ரலிங்கமும், பஞ்ச லிங்கங்களும், காசிலிங்க மூர்த்தியும் தரிசிக்கலாம். மும்முடி விநாயகர்கள் அழகாக உள்ளனர்.
அர்த்த மண்டபத்தில் பாதாளத்து லிங்க தரிசனம் வித்தியாசமானது. செவ்வாய் கிழமைகளில் பாதாள லிங்கத்திற்கு பச்சைக் கற்பூர அபிஷேகம் செய்தால் திருமண பாக்யம் கிட்டும் என்பார்கள்.