சிவதரிசனம் பெற்று முக்தியடைய விரும்பிய உரோமச முனிவரின் விருப்பத்தை பூர்த்தி செய்ய எண்ணிய அவரது குரு அகஸ்தியர், ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அந்த மலர்கள் எங்கெல்லாம் சென்று கரை ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு பணித்தார். அவ்வாறே ஒன்பது இடங்களில் ஒன்பது லிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டார் உரோமச முனிவர். இவையே நவ கயிலாயங்கள்.
இவற்றுள் மூன்றாவது மலர் சென்று கரை ஒதுங்கிய இடமே கோடகநல்லூர். நவகோள்கள் ஒவ்வொன்றும் நவ கயிலாயங்களில் ஆட்சி செலுத்துவதாக ஐதீகம். அதன்படி இத்தலத்தை அங்காரக ஸ்தலம் என்பார்கள்.
பரீட்சித்து மன்னனையும், நளனையும் தீண்டிய கார்க்கோடக பாம்புக்கு, மஹாவிஷ்ணு முக்தி அளித்த ஸ்தலம் என்பதால் இவ்வூரை கார்க்கோடக நல்லூர் என்று அழைத்தனர். பின்னர் மருவி கோடகநல்லூர் என்றானது. இன்றும் இங்கு கருநாக பாம்புகள் அதிகமிருப்பதாக கூறுகின்றனர். மனோன்மணியத்தில் வரும் சுந்தர முனிவர் அவதரித்த ஸ்தலம்.
ஸ்வாமிக்கு சிகப்பு வஸ்திரம் சாத்தி, துவரம் பருப்பு நைவேத்யம் செய்து பிரார்த்தித்துக் கொண்டால் செவ்வாய் தோஷத்திலிருந்து விடுபடலாம். செவ்வாய் தோஷம் கொண்ட பெண்கள் 58 விரலி மஞ்சள்களை தாலிக்கயிற்றில் கட்டி இங்குள்ள நந்தியின் கழுத்தில் கட்டி பிரார்த்தித்துக் கொண்டால் செவ்வாய் தோஷம் நீங்குவதாக ஐதீகம்.
கார்க்கோடகன் பூஜித்ததால் நாக தோஷ பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. கார்க்கோடக க்ஷேத்ரம் என்ற பெயரையும் கொண்டது.
கார்க்கோடகஸ்ய நாகஸ்ய தமயந்த்யா நளஸ்யச
ரிது பர்ணஸ்ய ராஜ ரிஷே: கீர்த்தனம் கலிநாசனம்