பல்வேறு ஸ்தலங்களுக்கு சென்று இறைவனை தரிசித்துவிட்டு, திருப்பைஞ்சீலி நோக்கி வந்து கொண்டிருந்த அப்பர் பெருமான் களைப்பு மிகுதியினாலும், பசி - தாகம் மேலிட்டதாலும் சோர்வுற்ற போதிலும் விடாது நடந்து வந்து கொண்டிருந்தார். இங்கு கோவில் கொண்டுள்ள இறைவன், அவரது களைப்பைப் போக்க ஒரு பொய்கையையும் ஒரு பசுஞ் சோலையையும் தோற்றுவித்தார்.
பின்னர் ஒரு வயோதிக அந்தணர் வடிவில் வந்த இறைவன், பொதி சோறு சுமந்து கொண்டு, அப்பர் வரும் வழியில் நின்றார். களைப்பு நீங்க பொய்கையில் நீராட வைத்து, தான் கொண்டு வந்திருந்த சோற்றினை உண்ண வைத்து, குடிக்க நீரும் தந்து, அப்பரின் சோர்வை போக்கினார் இறைவன். செல்லுமிடம் எது? என்று அப்பரிடம் கேட்டறிந்த வயோதிக அந்தணர், தாமும் பைஞ்சீலிக்கு செல்வதாகக் கூறி, வழி நடத்தி, பைஞ்சீலியை அடைந்தவுடன் மறைந்து விட்டார் வயோதிக அந்தணர் வடிவிலிருந்த இறைவன்.
அப்பருக்கு சோறு தந்து வழிகாட்டி மறைந்த இடத்தில் சோறுடைத்த ஈஸ்வரன் சந்நிதி உள்ளது.
வசிஷ்ட முனிவர்க்கு நடராஜப் பெருமான் நடனக் காட்சி காட்டியருளிய ஸ்தலம். தென் கயிலாயம், மேலை சிதம்பரம் என்றெல்லாம் போற்றப்படும் ஸ்தலம்.
மார்க்கண்டேயனைக் காப்பாற்ற, திருக்கடையூரில் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு யமனை சம்ஹாரம் செய்தார் அல்லவா? இதனால் மக்கள் இறப்பின்றி, ஜனத்தொகை பெருகலாயிற்று. கிரமமாக நடக்க வேண்டிய காரியங்கள் நடைபெறவில்லையே என வருந்திய பிரம்மன், திருப்பைஞ்சீலி இறைவனிடம் வந்து முறையிட்டார். பிரம்மனின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இவ்வாலயத்து தென்திசையிலுள்ள பாதாளத்தில் ஒரு பிலத்துவாரம் வழியாக யமனை வரவழைத்தார் இறைவன். யமனுக்கு உபதேசங்களை செய்து, மீண்டும் அவனது பணிகளைத் தொடருமாறு பணித்தார். அப்படி மீண்டு வந்த யமனே இங்கு சந்நிதி கொண்டுள்ளார் என ஸ்தல வரலாறு.
பழைய அம்பிகையின் திருவுருவம் பின்னப்பட்டமையால் புதிய திருவுருவம் ஒன்றை செய்து பிரதிஷ்டை செய்தனர். துறையூர் ஜமீன்தாரின் கனவில் தோன்றி தன்னை அப்புறப்படுத்த வேண்டாம் என்று பழைய அம்பிகை கூறியதால், இரண்டு திருவுருவங்களையும் பிரதிஷ்டை செய்துள்ளனர். அம்பிகை இத்தலத்தில் தவம் மேற்கொண்டிருந்தபோது, தேவலோக மங்கையர்கள் வாழை மரங்களாயிருந்து நிழலைத் தந்து கொண்டிருந்ததாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
தேவாரத் திருத்தலம்.