அன்றைய நாளில் அரிசொல் ஆறு எனப்பட்ட அரசலாற்றின் கரையை தவம் செய்ய ஏதுவான இடம் என தேர்ந்தெடுத்து அமர்ந்தாள் சரஸ்வதி தேவி. பிரம்ம தேவனையே கணவனாக அடைய வேண்டும் என்ற கோரிக்கையுடன் தவத்தை ஆரம்பித்தாள். இவளது தவத்தினால் மகிழ்ந்து பிரத்யட்சமான பிரம்மன் சரஸ்வதி கோரியபடி அவளையே மணந்தார் என ஸ்தல வரலாறு.
விக்ரம சோழ மன்னனிடம் தலைமைப் புலவராக இருந்த ஒட்டக்கூத்தர் மேலும் பாண்டித்யம் பெறவும், வரகவி பாடும் திறன் பெறவும், சரஸ்வதியைக் குறித்து இத்தலத்தில் நீண்ட தவம் மேற்கொண்டார். மஹா கணபதியை பூஜித்து ஆசி பெற்று தவத்தை துவக்கினார். பிரத்யட்சமான சரஸ்வதி தேவி தன் வாய் தாம்பூலத்தை ஒட்டக்கூத்தருக்கு தந்து நல்லாசி வழங்கினார்.
'எனக்கு பிரத்யட்சமான இதே இடத்தில் கோவில் கொண்டு, உன்னை தரிசிக்கும் பக்தர்களுக்கும் அருள வேண்டும்' என சரஸ்வதியிடம் பிரார்த்தித்தார் ஒட்டக்கூத்தர். பிரம்மாவை மணப்பதற்காக தேவி தவம் மேற்கொண்ட அதே இடத்தில் சுயம்புவாக எழுந்தருளினார் சரஸ்வதி தேவி.
கூத்தர் இங்கு தவமிருந்து சரஸ்வதி தேவியின் அருள் பெற்று கவித்துவம் பெற்றதில் மகிழ்ந்த மன்னன் அவர் தவமிருந்த கிராமத்தை அவருக்கே தானமாக வழங்கினான். இதனால் இவ்வூர் கூத்தனூர் எனப் பெயர் பெற்றது.
ஒட்டக்கூத்தரின் பேரனான ஓவாத கூத்தன் என்பவன் பிற்காலத்தில் இங்கே கற்கோவில் எழுப்பினான் என ஸ்தல வரலாறு.
பிறவி ஊமையாக இருந்த புருஷோத்தம பாரதி என்பவன் இத்தலத்தில் சரஸ்வதி தேவியைக் குறித்து கடுந்தவம் புரிந்தான். ஒரு விஜயதசமியன்று அவனுக்கு காட்சி தந்த தேவி, அவனுக்கு பேச்சு திறனையும் கவி பாடும் புலமையையும் தந்தார் என ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது.
புரட்டாசி மாத விழாவின் முதல் நாள் சந்தனக்காப்பு, 2ம் நாள் விநாயகர் ஊர்வலம், 3ம் நாள் ராஜராஜேஸ்வரியாக அலங்காரம், 4ம் நாள் மஹாலட்சுமியாக அலங்காரம், 5ம் நாள் சாகம்பரி அலங்காரம், 6ம் நாள் சந்தான லட்சுமியாக அலங்காரம், 7ம் நாள் சரஸ்வதிக்கு அபிஷேக ஆராதனைகள், 8ம் நாள் திருப்பாத தரிசனம் மற்றும் மஹா தீபாராதனை, 9ம் நாள் சிறுவர் - சிறுமியர்களுக்கு எழுத்து பயிற்சி மற்றும் ருத்ராபிஷேகம் என விதவிதமாக 18 நாட்களுக்கு விழா கொண்டாடுவார்கள்.