ஸ்ரீ ராமர், தில தர்ப்பணம் செய்வதற்காக தர்ப்பை கொண்டு வரும்படி ஹனுமனிடம் பணித்தார். ஹனுமன், தர்ப்பை ஆண்டார்பந்தி எனும் ஊருக்கு சென்றார். போகும் வழியில் இவ்வூருக்கு வந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கார்த்தவீரியன் சிவபெருமானை வேண்டி வேள்வி செய்து கொண்டிருந்தபோது, யாகமண்டபத்தில் புகுந்து விளையாடிய ஹனுமனை, பலமிழக்குமாறு சபிக்கிறான் கார்த்தவீரியன்.
இத்தலத்தில் தங்கி ஸ்வாமியையும் - அம்பாளையும் வழிபட்டு தனது சாபம் நீங்கப் பெற்றார் ஹனுமன். இதனால் ஆனந்தமடைந்து ஹனுமன் கூத்தாடியதால், ஹனுமன் - ஆனந்தம் - குடி (ஹனுமானந்தகுடி) எனப் பெயருற்று, பின்னர் மருவி மானந்தகுடி என்றானதாக கூறுவர்.
சஞ்சீவி மலை தூக்கி வரும் பாவனையில் சிலாவடிவமாக மங்கள ஆஞ்சநேயர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றார்.
இது ஜடாயுவுக்கு ஸ்ரீராமர் திலதர்ப்பணம் செய்த இடம். இவ்விடத்தை திலத்திட்டு என்றும் கோழிகுத்தி என்றும் அழைப்பார்கள். மேலும், இவ்விறைவனை கிருஷ்ணர் தரிசித்ததால் கிருஷ்ணாபுரம் எனப் பெயர் கொண்டது.