ஸ்தல வரலாறு:
திருவஹீந்திரபுரத்து தேவநாதசுவாமி கோவிலின் விக்ரகங்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை வந்தபோது, கிழக்கிந்திய கம்பெனியில் சிரஸ்தாராகப் பணியாற்றிய ரங்காச்சார்லு என்பவர், பல விதமான சிரமங்களை ஏற்று, பின் விக்ரகங்களைக் கொணர்ந்து, இங்கு பிரதிஷ்டை செய்ய வழி செய்தார். விக்ரகங்களைத் திரும்ப எடுத்துச் செல்ல வேண்டாம் என இவ்வூர் மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதன்படி, இங்குள்ள விக்ரகங்கள் இங்கேயே நிலை பெற்று விட்டனர் என ஸ்தல வரலாறு.
1848 வைகாசி 22, வெள்ளிக்கிழமை மக நட்சத்திரம் கூடிய நாளில், இங்கே எழுந்தருளியிருப்பதாக கெஜட் குறிப்பொன்று கூறுகின்றது.
ஹயக்ரீவ ஆராதனம் செய்ய மறந்து, போஜனம் செய்ய முற்பட்ட வேதாந்த தேசிகர் முன்பாக குதிரை வடிவில் வந்த ஹயக்ரீவர், அவர் முன்பு முகத்தை நீட்டி, உணவைப் பெற்றுக் கொண்டு மறைந்தார் எனக் கூறுவர். வேதாந்த தேசிகரின் சீடன் ஒருவனுக்கு, வயிறு உப்பி மகோதரம் வந்து அவஸ்தைப்பட்டான். வெண்குதிரை காட்டிய உபாயத்தை கையாண்டதில் குணமடைந்தான். தீராத வயிற்று நோய்களுக்கு ஹயக்ரீவரை பிரார்த்தித்தால் உடன் நிவாரணம் கிடைக்கும்.
ஹயக்ரீவர் புராண வரலாறு:
முன்பொரு சமயம், அசுரவதம் முடித்த களைப்பில், ஸ்ரீமந் நாராயணன் - வில்லின் நாணினை தனது முகவாய்க் கட்டையில் சாய்த்து வைத்தபடி, நித்திரை கொண்டார். அவரை பார்க்க வந்த இந்திரன், அயர்ந்து தூங்கும் அவரை எழுப்ப, வில்லின் நாணினை அறுத்தான். அதன் பிரயோக சக்தியால் வில் தெறித்து, திருமாலின் தலை அறுந்து விட்டது.
இதை எதிர்பாராத இந்திரன் பராசக்தியை வேண்டினான். இந்திரன் முன் பிரத்யட்சமான பராசக்தி, குதிரை முகம் ஒன்றை, அறுபட்ட திருமால் கழுத்தில் பொருத்துமாறு பணித்தாள். ஹயக்ரீவ அவதாரம் கொண்டால், ஹயக்ரீவ அசுரனுக்கு முடிவு ஏற்படும் என்பதே நோக்கம்.
ஹயம் என்றால் குதிரை, க்ரீவம் என்றால் கழுத்து எனப் பொருள். அதாவது குதிரை முகத்தையும், மனித கழுத்தையும் கொண்ட ஹயக்ரீவன் எனும் அரக்கன், தன்னைப் போலவே குதிரை முகம் கொண்டவரால் மட்டுமே தனக்கு மரணம் நிகழ வேண்டும் என வரம் பெற்று, மமதை கொண்டு, அனைவரையும் இம்சித்து வந்தான்.
குதிரை முகமும் மனித உடலும் கொண்ட திருமேனியுடையவர் ஹயக்ரீவப் பெருமான். அசுரனை சம்ஹாரம் செய்து அவதார காரியத்தை முடித்துக் கொண்டார் என தேவி புராணம் கூறுகின்றது.
பிரம்மாவிடமிருந்து நான்கு வேதங்களைப் பறித்துக் கொண்ட மது - கைடபர் எனும் இரண்டு அசுரர்களை பாதாள லோகம் சென்று சம்ஹாரம் செய்து, வேதங்களை மீட்டு வந்தவர் ஹயக்ரீவர்.