இரண்யாட்சன் எனும் அசுரனால் கவர்ந்து செல்லப்பட்டு பாதாளத்தில் ஒளித்து வைக்கப்பட்ட பூமி தேவியை, வராக அவதாரம் எடுத்து மீட்டு வருகிறார் மகாவிஷ்ணு. பின்னர் பூமி தேவிக்கு ஷடாட்சர உபதேசம் செய்து, ஸ்திரமாயிருக்க வேண்டி சிவபெருமானை வழிபடுமாறு பணிக்கின்றார். மகாவிஷ்ணு குறிப்பிட்டபடி, காவிரியின் தென் கரையில் ஓர் அரச மரமும் அதனருகே பிரம்ம தீர்த்தக்குளமும் இருக்கக்கண்டு, குளத்தின் தென்புறமாக ஓர் சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபடலானாள் பூமி தேவி.
பின்னர் விஸ்வகர்மாவை அழைத்து இக்கோவிலை நிர்மாணிக்குமாறு பணிக்கின்றாள் பூமி தேவி. அவ்வாறே விஸ்வகர்மா நிர்மாணித்ததும், உமா மகேஸ்வரரையும் உமா தேவியையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டாள். வைகாசி மாதம் பஞ்சமியும் ரோகிணியும் குரு வாரமும் கூடிய சுபயோக வேளையில் சுவாமியையும் அம்பாளையும் பிரதிஷ்டை செய்தாள். இதனால் இத்தலத்திற்கு பூமீஸ்வரம் என்றும் இறைவனுக்கு பூமீஸ்வரர் என்றும் பெயர் வந்தது.
பூமி தேவியின் வழிபாட்டில் மகிழ்ந்து பிரத்யட்சமான இறைவன் அவளுக்கு ஸ்திரமாயிருக்க வரம் தந்ததுடன், பூமிதேவி வேண்டியபடி அவள் உருவாக்கிய திருக்குளத்தில் ஸ்நானம் செய்து இவ்விறைவனை வழிபடுவோர்க்கு சகல காரியங்களும் கைகூட ஆசியும் வழங்குவதாகத் தெரிவித்தார்.
குளக்கரையிலுள்ள விநாயகரை வழிபட்டு, பூமி தேவியை வணங்கி, பின்னர் தீர்த்தத்தில் இறங்கி நின்று கொண்டு 'பூமி: பூம்னா' என்ற மந்திரத்தை ஜபித்து ஸ்நானம் செய்பவர்களின் பாவங்கள் தொலையும் என ஐதீகம்.
புரூரவஸ் எனும் அரசன் வேட்டைக்குச் சென்றபோது, அங்கே தவம் செய்து கொண்டிருந்த கர்க முனிவரின் தவத்தைக் கலைத்தும், அவரை நிந்தித்தும் தகாத முறையில் நடந்து கொண்டான். அதனால் தொழுநோய் வந்து அவதியுற்றான். இவ்வாலயம் வந்து உமா மகேஸ்வரரைச் சரணடைந்து மனமுருக வேண்டினான். பின்னர் கௌதம ரிஷியை ஆசாரியனாகக் கொண்டு, வடக்கு பிரகாரத்தில் சிவலிங்கம் ஒன்றினைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தொழுநோய் நீங்கப்பெற்று நலமடைந்தான். இவரே ஸ்ரீ ஆதி வைத்யநாதர்.
தட்சிணாமூர்த்தி சந்நிதியின் அருகேயுள்ள ஞானக்கூபம் எனும் கிணற்று நீரைப் பார்த்தாலோ, பருகினாலோ சிவஞானம் உண்டாகும் என்பர்.
வேறு எங்கும் தரிசித்திறாத அழகான நடராஜர் சிலை ஒன்றினை நிர்மாணிக்குமாறு ஸ்தபதியிடம் பணித்தான் கண்டராதித்த சோழன். எவ்வளவு முயன்றும் சிலை முழுமையடையாமல் தடங்கல்கள் வந்து கொண்டே இருந்தன. தாமதத்தைப் பொறுக்காத அரசன், சிலையை முடிக்க ஒரு நாள் கெடு வைத்தான். செய்வதறியாது திகைத்து கவலையில் இருந்த ஸ்தபதியின் முன்பாக, வயதான தம்பதியினர் தோன்றி குடிக்கத் தண்ணீர் கேட்டனர். கொதித்து உருகிக் கொண்டிருக்கும் உலோகக் குழம்பைத் தவிர வேறொன்றுமில்லை என்றார் ஸ்தபதி.
எவரும் எதிர்பாரா வண்ணம், உருகிக் கொண்டிருக்கும் உலோகக் குழம்பை எடுத்து குடித்து விட்டனர் தம்பதியினர். அடுத்து நிகழ்ந்த அதிசயமாக இருவரும் உலோக விக்ரகங்களாக மாறினர். தாமாகவே தோன்றிய விக்ரகங்கள் ஆதலால், நாடி-நரம்புகள், கை ரேகைகள், மச்சம், மரு ஆகியவற்றுடன் அழகே உருவாகக் காட்சி தந்தனர்.
சிலைகள் தோன்றிய விதத்தை மன்னருக்கு விளக்கினார் ஸ்தபதி. அதைச் சோதித்துப் பார்க்க எண்ணிய மன்னன், உளியால் மருவைத் தட்டினான். அதிலிருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. அரசனின் கை-கால்கள் செயலிழந்து போய் நோயுற்றான். செய்த பிழையை மன்னித்தருளும்படி இவ்விறைவனை வேண்டினான். அங்கங்கள் பழைய நிலையைப் பெற்றன என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பிற்காலத்தில், செம்பியன் மாதேவியார் இதை கற்கோவிலாகக் கட்டியதாகக் கூறப்படுகின்றது. இவர் சிவபூஜை செய்யும் காட்சி புடைப்புச் சிற்பமாக உள்ளது. கௌதம ரிஷிக்கு ஆனந்த தாண்டவத்தைக் காட்டியருளிய ஸ்தலம்.
தேவாரத் திருத்தலம்