வள்ளியுடன் முருகன் தனித்து பேசிக் கொண்டிருந்தபோது வள்ளியின் உறவினர்கள் வருவதைப் பார்த்த முருகன் வேங்கை மரமாக மாறினார். இதற்கு முன்னர் இங்கு வேங்கை மரம் இல்லையே இப்போது திடீரென எப்படி முளைத்தது? என அதை வெட்ட முற்பட்டனர். உடனே முருகன் வேங்கை மரத்திலிருந்து பிரத்யட்சமாகி விஸ்வரூப தரிசனம் காண்பித்தார் என ஸ்தல வரலாறு. வெட்டுப்பட்ட பகுதிக்கு உடை அணிவித்து, நித்ய பூஜைகளை மேற்கொள்கின்றனர்.
காதல் வேள்வி நடந்த இடம் என்பதால் வேள்வி மலை எனப் பெயருற்று, பின்னர் மருவி வேளிமலை என்றானது.
அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள வள்ளி குகையில் வள்ளித் திருமணம் நடந்தது என்பர். இங்கு விநாயகப் பெருமான் எழுந்தருளியுள்ளார். வள்ளியின் தொடர்புடைய தினைப்புனம், வள்ளிச் சோலை, வட்டச் சோலை, கிழவன் சோலை ஆகிய இடங்களை இங்கு காணலாம். வள்ளி நீராடிய சுனை அருகே பிள்ளையார், முருகன், வள்ளி ஆகியோரின் புடைப்பு சிற்பங்களைக் காணலாம்.