மூலவர்: ஆட்சீஸ்வரர், அம்பாள்: இளங்கிளியம்மை, மற்றொரு மூலவர்: உமையாட்சீஸ்வரர், அம்பாள்: உமையாம்பிகை.
பிரதான ஆலயம் செல்லும் வழியில் அமைந்துள்ள ஸ்தல விநாயகரான அச்சு முறித்த விநாயகர் மேற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். முதலில் இவரை வணங்கி ஆசி பெற்று, சிதறு தேங்காய் உடைத்து, பிரார்த்தனை செய்து கொண்டு மூலவரை தரிசிக்கச் செல்கின்றனர்.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் ஆட்சீஸ்வரர். சதுர ஆவுடையாருடன் கூடிய அழகிய திருமேனி. சுயம்பு லிங்கம். திரிநேத்ரதாரி முனிவர் பிரதிஷ்டை செய்த லிங்கம். அகஸ்திய மாமுனி பூஜித்த லிங்கம். கிழக்கு பார்த்த சந்நிதி.
அம்பாள் இளங்கிளியம்மை எனப்படும் பாலசுகாம்பிகா அழகே உருவாக தரிசனம் தருகின்றாள். தெற்கு பார்த்த சந்நிதி.
உட்பிரகாரத்திலுள்ள பிரதான கருவறையில் மற்றொரு மூலவரான உமையாட்சீஸ்வரர் எழுந்தருளியுள்ளார். வட்ட வடிவ ஆவுடையாருடன் கூடிய அழகிய திருமேனி. பின்புறமாக சிவ-பார்வதி திருமணக் கோலக் காட்சி. அகஸ்தியருக்கு திருமணக் கோலம் காண்பித்தவர். அரசனால் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கம். புலஸ்தியர் பூஜித்த லிங்கம்.
உமையாம்பிகை எனப்படும் மெல்லியலாளும் உடன் எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள்.
கண்களை மூடிக்கொண்டு தியானத்தில் ஆழ்ந்துள்ள நந்தி வித்தியாசமான அழகு. திரிநேத்ரதாரி முனிவரின் ஜீவ சமாதி, நந்தியம் பெருமானுக்கு கீழே இருப்பதாக கூறுகின்றனர்.
அடுத்து ஸ்ரீ நிவாசப் பெருமாள் ஆவுடை மீது நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றார். அலர் மேல் மங்கா தாயார் உடன் எழுந்தருளியுள்ளார். பெருமாளை சேவித்தபடி எழுந்தருளியுள்ள ஆஞ்சநேய ஸ்வாமியை சேவிக்கலாம்.
பிரம்ம கபால மாலையுடன் காட்சி தரும் பைரவர் மிகுந்த வரப்பிரசாதி.
சித்தி-புத்தி சமேதராக பொள்ளாப் பிள்ளையார், பரவை-சங்கிலி நாச்சியார்களுடன் கூடிய சுந்தரமூர்த்தி நாயனார், மாணிக்கவாசகரும் காரைக்கால் அம்மையாரும் பார்த்திருக்க நடம் புரியும் சிவகாமி உடனாய நடராஜப் பெருமான் என்று எண்ணற்ற மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
திரிபுர தகனப் போரின் போது, சிவபெருமான் கரங்களில் அம்பாக இருந்த நரசிம்ம வடிவம் அமைத்த சிம்ம தீர்த்தம் நாழிக்கிணறாக ஸ்தல விருட்சத்தருகே உள்ளது.
பிரம்ம தேவர் அமைத்த பிரம்ம தீர்த்தம் ஆலயத்தின் எதிரில் திருக்குளமாக இருக்கின்றது.
கொன்றையடி சேவை:
சித்ரா பௌர்ணமியன்று காலை - வில், அம்பு ஏந்திய சோமாஸ்கந்தர் தேரோட்டம் நடைபெறும். அன்று மாலை ஸ்தல விருட்சமான கொன்றை மரத்தின் அருகே தேர் நிறுத்தப்பட்டு இறைவன் திரிநேத்ரதாரி முனிவர்க்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சியே கொன்றையடி சேவை ஆகும்.
கொன்றை மரத்தடியில் கொன்றைநாதர் - திரிபுராந்தகியுடன் எழுந்தருளுவார். எதிரே திருமால். இவர்களை கும்பிட்டவாறு திரிநேத்ரதாரி முனிவரின் திருவுருவம் காணப்படும். பஞ்சத்தட்டு குடத்துடன் தீபாராதனை நடைபெறும். இதுவே திரிபுராந்தக தரிசனம் என்பர்.
கொன்றையடி சேவை முடிந்ததும் இம்மரம் பூக்கத் தொடங்கும் என்கிறார் கோயில் அர்ச்சகர்.