லட்சுமி தேவியும் சரஸ்வதி தேவியும் தங்களுக்குள் யார் பெரியவர் என்று தர்க்கத்தில் பிரம்மனிடம் நியாயம் கேட்டனர். லட்சுமி தேவியே உயர்ந்தவள் என்று பிரம்மன் தீர்ப்புக் கூறியதால் சரஸ்வதி கோபித்துக் கொண்டு பூலோகத்திலுள்ள சஹ்ய பர்வதம் வந்து விட்டாள்.
பிரம்மதேவன் உத்திரவேதியில் அஸ்வமேத யாகம் ஒன்று செய்ய ஏற்பாடுகள் செய்து கொண்டிருந்தார். யாகம் செய்பவர் தனது துணைவியை யக்ஞ பத்னியாக யாகசாலையில் அமர்த்தி அவளது துணையுடன் யாகம் நடத்த வேண்டும் என்பது நியதி. இதற்கு சரஸ்வதியை அழைத்தார். கோபத்திலிருந்த சரஸ்வதி மறுத்து விட்டாள். ஆகவே மற்றொரு தாரமான சாவித்ரியை வைத்துக் கொண்டு யாகத்தை ஆரம்பித்தார்.
மேலும் கோபமுற்ற சரஸ்வதி தேவி, நதி ரூபத்தில் தோன்றி, வெள்ளப் பெருக்காக மாறி யாகசாலையை நெருங்கினாள். வேகவதி எனும் பெயருடன் காட்டாறாக சீறி வந்த நதியின் அழிவிலிருந்து தம்மையும் தாம் செய்யவிருக்கும் யாகத்தையும் காப்பாற்ற திருமாலிடம் வேண்டினார் பிரம்மதேவன்.
பிரம்ம தேவர் திருமாலுக்கென எடுக்க முற்பட்ட வேள்விக்கு பல இடையூறுகளை செய்தாள் சரஸ்வதி. யாகத்தை அழிக்க பூத கணங்களையும் அசுரர்களையும் அனுப்பினாள் சரஸ்வதி. அவற்றை நாராயணன் ஒடுக்கினார். போர்க்கோலத்துடன் அஷ்டபுஜ காளியை அனுப்பினாள் சரஸ்வதி. காளியை அடக்க அஷ்டபுஜங்களில் ஆயுதங்களுடன் தோன்றிய திருமால் காளியை எதிர்த்து அடக்கினார். பின் வேகவதி ஆற்றில் வெள்ளம் கரை புரளச் செய்தார். பெருமாள் சயனக்கோலத்தில் அணை போட்டு தடுத்தார். பின் எண்கால சிவ சரபத்தை அனுப்பினார். சிவ சரபத்தை ஒடுக்க அஷ்டபுஜப் பெருமாள் தோன்றினார் என ஸ்தல வரலாறு.
மகாசந்த முனிவரின் தவத்தைக் கலைக்க இந்திரன் பல இடையூறுகள் செய்தான். யானையாக உருவம் கொண்டு முனிவர் பல திவ்ய தேசங்கள் சென்று மகாவிஷ்ணுவை தரிசனம் செய்து வரும் வேளையில், காஞ்சி மாநகர் வந்து, மலர் பறிக்க குளத்தில் இறங்கினார். முதலை ஒன்று காலைப்பற்றிக் கொள்ள அஷ்டபுயத்தோன் காப்பாற்றி, சாபவிமோசனம் அளித்ததாக வரலாறு. கஜேந்திரனுக்கு மோட்சமளித்த அதே கோலத்தை காண வேண்டும் என்ற பேயாழ்வாரின் வேண்டுகோளுக்காக அதே கோலத்தில் இங்கு எழுந்தருளியுள்ளதாக ஸ்தல வரலாறு.