தாடகை எனும் அசுரமாது புத்திரப்பேறு வேண்டி இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை பூஜித்து வழிபட்டாள். பூஜையின் முடிவில் மாலை சாத்த எழுந்தபோது, சோதனையாக அவளது ஆடை நெகிழ்ந்தது. இரண்டு முழங்கைகளால் பிடித்துக் கொண்டே மாலையை ஏற்குமாறு வேண்டி நின்றாள். சிவலிங்கத்தின் திருமுடி சாய்ந்து மாலையை ஏற்றுக் கொண்டது.
அவளது பக்திக்கு மெச்சி தரிசனம் தந்த இறைவன், இங்கேயே கோவில் கொண்டு அனைவரையும் ரட்சிக்குமாறும், தனது பெயரிலேயே இத்தலம் விளங்க வேண்டும் என்றும் வேண்டினாள். இதனால் இவ்வூர் தாடகையீச்சரம் எனப்படுகிறது.
வீரசேனன் எனும் சோழ அரசன் லிங்கத்தின் சாய்ந்த திருமுடியை நிமிர்த்த முற்பட்டான். யானை - குதிரை வைத்து கட்டி இழுத்துப் பார்த்தான். அப்படியும் நிமிரவில்லை.
குங்கிலியக்கலய நாயனார் எனும் நாயனார் தனது கழுத்தில் அரிகண்டம் கட்டிக் கொண்டு, இறைவன் கழுத்தில் மெல்லிய நூலைக் கட்டி இழுத்தார். அரிகண்டம் கழுத்தை அறுக்கத் தொடங்கியது. சிவபெருமான் லிங்கத்திலிருந்து வெளிப்பட்டு தம் கரத்தை நாயனாரின் தலை மீது வைத்தார். நாயனாரின் அறுபட்ட தலை பொருந்தியது.
தாடகைக்காக குனிந்தும், குங்கிலியருக்காக நிமிர்ந்தும் திருவிளையாடல்கள் புரிந்ததால் ஜடை விரிந்து காணப்படுகிறது. இதனால் அருணஜடேஸ்வரர் என்ற பெயரைக் கொண்டார்.
தனக்கு ஞான உபதேசம் செய்யக் கோரி இத்தலத்தில் தவமிருந்தாள் உமையன்னை. கோரியபடி உபதேசம் பெற்றார். உபதேசக் கோலமாக அம்பாள் கிழக்கிலும், ஸ்வாமி மேற்கிலும் எழுந்தருளியுள்ளனர்.
வாசுகியின் மகள் சுமதி, கன்னியாகவே இருக்க வேண்டி அம்பாள் சந்நிதியிலுள்ள கூபத்தில் தோன்றி வழிபட்டு வந்தாள். அம்பாள் சந்நிதியின் மேற்புறம் நாகதீர்த்தம் ஒன்றை உண்டாக்கினாள். திருமாளிகைப்பத்தியின் மேற்புறமாக நாககன்னிகை கோவில் ஒன்றும் உள்ளது.
குங்கிலியக்கலய நாயனார் இவ்விறைவனுக்கு ஆவுடையார் ஒன்றை செய்துக் கொண்டு வந்து பொருத்த முற்பட்டார். இறைவனின் வடிவம் பெரியதாக இருந்ததால் ஆவுடையார் பொருந்தவில்லை. மனம் வருந்திய நாயனார் தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டார். அவரை தடுத்த இறைவன், தனது மேனியை எக்கிக் கொண்டு ஆவுடையை ஏற்றார்.
நாயனாருடைய பிள்ளை இறந்த சேதி அப்போது சொல்லப்பட்டது. நாக கன்னிகை தீர்த்தத்தில் மூழ்க வை எனப் பிள்ளையார் அசரீரியாகக் கூறினார். அவ்வாறே செய்ய பிரேதம் உயிர் பெற்றது. இதனால் இந்த பிள்ளையாருக்கு பிணம் மீட்ட விநாயகர் என்ற பெயர் வந்தது.
இது ஒரு தேவாரத்திருத்தலம்.