சிவகணங்களுள் ஒருவனான புஷ்பதந்தன், சிவபெருமானுக்கு குடை பிடிக்கும் பணியில் மஞ்சுவானி எனும் கந்தர்வ மங்கையைக் கண்டு மயங்கி, தனது பணியை மறந்து நின்றான். இதனால் சாபம் கொண்டு பூமியில் வேப்ப மரமாக நிற்கின்றான். தவறை உணர்ந்து, சாப விமோசனம் வேண்டி நின்றவனிடம், இத்தலத்தில் வேப்ப மரமாக நிற்கும்படியும், தான் அதன் நிழலில் லிங்கமாக எழுந்தருள விழைந்துள்ளதாகவும் தெரிவித்தார் இறைவன்.
தனது சிரசிலிருந்து கங்கையை எடுத்து இங்கு தீர்த்தம் ஒன்றை உண்டாக்கினார்.
நிம்பு, ஆத்தி, பொற்பனை, மண்டபம் என யுகத்திற்கு ஒன்றாக மாறி மாறி நான்கு யுகங்கள் கழித்த புஷ்பதத்தன், அரங்குளநாதரின் அருளால் சாபம் நீங்கப் பெற்றான்.
கல்மாஷபாதன் என்ற பெயர் கொண்ட சோழ மன்னன் புத்ர பாக்யம் வேண்டி தீர்த்த யாத்திரை ஒன்றை மேற்கொண்டான். அகஸ்தியர் மூலமாக இத்தலத்தின் பெருமைகளை கேட்டறிந்து, இத்தலத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபட ஆசைப்பட்டான். வரும் வழியில் ஒரு பனைமரத்திலிருந்து பனம்பழம் ஒன்றைப்பறித்த வேடன் அதை வணிகனுக்கு விற்பதை கண்ணுற்றான். பனம்பழத்தைப் பார்த்து வியப்படைந்த மன்னன், அதைப் பறித்த மரத்தைக் காட்டச் சொன்னான். தினமும் ஒரு பழம்தான் கிடைக்கும் என்று கூறிய வேடன் அந்த மரத்தைக் காட்டினான்.
பனைமரம் பொன் வடிவில் தேஜோ மயமாக மின்னிற்று. அந்த பொற்பனை மரத்தை சுற்றி வேலியிட்டு தானே காவல் காத்தான் மன்னன். அந்த மரத்தைச் சுற்றிலும் ஒரு நகரத்தையும் உண்டாக்கினான்.
அரண்மனையிலிருந்து வேலையாட்கள் தினமும் பூஜா திரவியங்களைக் கொண்டு வரும் வழியில் பெரிய கல் ஒன்றில் தடுக்கி விழுந்து விடுவார்கள். தினமும் பூஜா பொருட்கள் வீணாவதால் அந்த கல்லை தன் வாளால் அகற்ற முயன்றான் கல்மாஷபாதன். கல்லிலிருந்து ரத்தம் கசிந்தது. அதை வெளியே எடுத்துப் பார்த்ததில் அது ஒரு சிவலிங்கம் எனத் தெரிய வந்தது. சிவஅபராதம் நேர்ந்தமைக்காக வருந்தி தனது உயிரை மாய்த்துக் கொள்ள முற்பட்டான். அவனுக்கு காட்சி தந்த சிவபெருமான், அவனை தடுத்தாட் கொண்டு அவனுக்கு மகப்பேறு வரமளித்தார் என ஸ்தல வரலாறு.