இத்தலத்திலுள்ள பவழமல்லி மரத்தடியில் ஒளிந்து கொண்டு சுக்ரீவன், இங்குள்ள சிவலிங்கத்தை வழிபட்டு வந்தான். வாலிக்குப் பயந்தே இங்கு தஞ்சமடைந்தான். சுக்ரீவன் இங்கு ஒளிந்திருப்பதை தெரிந்து கொண்ட வாலி, சுக்ரீவனைத் தேடி இங்கு வந்தான். தன்னை வாலியிடமிருந்து காப்பாற்ற வேண்டி நின்ற சுக்ரீவனை, வாலி வரும் நேரம் பார்த்து அன்னப்பறவையாக மாறச் செய்து விட்டார் சுவாமி. சுக்ரீவனை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் சுவாமிக்கு ஆபத்சகாயேஸ்வரர் என்ற பெயர் வந்தது. பவழமல்லி மரத்தையும் சேர்த்து சிவசக்தி ஸ்வரூபமாக சுக்ரீவன் வழிபட்டு வந்ததால், அம்பாளுக்கு ப்ரபாளவல்லி (அல்) பவளக்கொடி எனப் பெயர் வந்தது.
கோவிலின் இரண்டாம் வாசலின் மேல் காணப்படும் சுதை சிற்பங்கள் - சுக்ரீவன் சிவ பூஜை செய்வது, பின்னர் சுவாமி அவனை அன்னப்பறவையாக மாற்றுவது போன்ற காட்சிகளை விளக்குகின்றன.
இங்கு சுவாமியே ஏற்படுத்திய தீர்த்தம் சூரிய தீர்த்தம். இந்த தீர்த்தத்தில்தான் சூரிய ஒளி பிரதிபலித்து சுவாமி மீது படர்கிறது. சுவாமி இருக்கும் மட்டத்திற்கே தீர்த்தக் குளமும் இருப்பதால் மட்டக்குளம் என்று கூறுவர். அம்பாள் உண்டாக்கிய தீர்த்தம் சந்திர தீர்த்தம்.
தஞ்சை மாவட்டத்தில் இரண்டு குரங்காடுதுறைகள் இருப்பதால், வட குரங்காடுதுறை மற்றும் தென் குரங்காடுதுறை என அடையாளம் காணப்பட்டது. இதில் தென் குரங்காடுதுறையைத்தான் சுருக்கி ஆடுதுறை என அழைக்கின்றனர். கோவில் உள்ள பகுதி நடராஜபுரம் எனப்படுகிறது.
தேவாரத் திருத்தலம்.