அகஸ்தியரின் சீடரான உரோமச முனிவர் சிவதரிசனம் பெற்று முக்தியடைய விரும்பினார். அவரது ஆசையை நிறைவேற்றும் வகையில் அகஸ்தியர் ஒன்பது மலர்களை தாமிரபரணியில் மிதக்க விட்டார். அந்த மலர்கள் கரை ஒதுங்கிய வெவ்வேறு இடங்களில் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
அந்த ஒன்பது சிவலிங்கங்கள் கோவில் கொண்ட வெவ்வேறு கோவில்களே நவ கயிலாயங்கள் என்பர். இக்கோவில்கள் ஒவ்வொன்றிலும் நவகோள்களில் ஒவ்வொன்று ஆட்சி செய்வதாக ஐதீகம்.
உரோமச முனிவர், நித்தியத்துவம் பெற வேண்டி கயிலைநாதனை பிரார்த்தித்தார். பொருநையின் தென் கரையிலுள்ள ஆலமரத்தடி சென்று வழிபடுமாறு பணித்தார் இறைவன். ஆலமரத்தடியில் சுயம்புவாக எழுந்தருளியுள்ள சிவலிங்கத்தை வழிபட்டு பிறவி இல்லாத நிலையை அடைந்தார் முனிவர் என ஸ்தல வரலாறு விவரிக்கின்றது.
நெல் குத்தும் வேலை செய்யும் சகோதரிகள் இருவர், மழைக்கு ஒதுங்குவதற்காக ஆலமரத்தடி வந்தனர். சிவலிங்கத்தின் மீது மழை நீர் வீழ்வது கண்டு, இப்படி சிவலிங்கம் மழையில் நனைகிறதே, இதை தடுக்க கோவில் ஒன்றை கட்டி அதில் லிங்கத்தை பிரதிஷ்டை செய்யலாமே என எண்ணினர். போதிய பணம் அவர்களிடம் இல்லாததால் அவர்களது எண்ணம் நிறைவேறவில்லை.
சிவனடியார் ஒருவர் இந்த பெண்மணிகளின் வீட்டிற்கு வருகை தந்தார். அவருக்கு உணவு படைத்தனர் சகோதரிகள். வீடு வெளிச்சமாக இல்லை எனவே உணவு உண்ண மாட்டேன் என மறுத்தார் சிவனடியார். விளக்கை ஏற்றி பிரகாசமாக ஆக்கியதும் உணவை உண்டு விட்டு சென்றார். வீட்டில் தினமும் விளக்கு எரிய எரிய அந்த பெண்மணிகளுக்கு செல்வம் சேர்ந்தது. போதிய பணம் கிடைத்ததும் கோவிலைக் கட்டினார்கள் என்றொரு கதை நிலவுகிறது. கோவில் தூணில் இவர்களது சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன.
சந்திரன் ஆட்சி செய்யும் ஸ்தலம்.