கடுவெளி என்றால் பரந்தவெளி எனப் பொருள். இது கடுவெளி சித்தரின் அவதார ஸ்தலம். இந்த சித்தர் இங்கு தவமிருந்து சிவதரிசனம் கண்டவர். இவருக்கு சிவபெருமான் காட்சி தந்தபோது நந்தி வெளியே நின்று கொண்டாராம். இதன் அடிப்படையில் நந்தி கோபுரத்திற்கு வெளியே இருக்கின்றார்.
ஆகாயவெளியில் உள்ள அனைத்து தேவதைகளும் இவ்விறைவனை வழிபட்டுள்ளனர். பஞ்ச பாண்டவர்கள் மற்றும் வாயு பகவான் நித்ய வழிபாடு செய்துள்ளனர்.
பூ எனும் புவனயோக சக்தியும், ராடனம் எனும் பூசுரதியான சக்தியும் இணையும் நட்சத்திர ஜோதி, பூராடன ஜோதியாக, கடுவெளி சித்தர் மூலமாக, இங்கு புரசை இலையில் வெளிப்பட்டது. இவை இரண்டும் சிவ ஜோதிகள். இந்த ஜோதியை புரசு இலை மூலம் பூவுலகிற்கு அளித்தவர் கடுவெளி சித்தர். புரசை மரத்தை பூவுலகிற்கு அளித்தவர் சாகம்பரி தேவி.
பூராடம் என்றால் தன்மையான தகைமை அதாவது அசலமற்ற அசையும் பாங்கு. பூராடம் நூல் ஆடும் என்றால், பூராடம் சலன சக்திகளைக் கொண்டுள்ளதால் இதனை பிணைத்திருக்கும் கும்ப கலச நார் சுடர்கள் அசையும் என்றே பொருள்.
பூராட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுவாமி சந்நிதிக்கு சாம்பிராணி புகை போட்டு, ஜவ்வாது, புனுகு சாத்தி, கேசரி நைவேத்தியம் செய்து வழிபடுகின்றனர்.