வால்மீகி முனிவர் இத்தலத்திற்கு வந்து நீண்ட காலம் தவமிருந்தார். முனிவரின் தவத்தினால் மகிழ்ந்த மகேசன், பிரத்யட்சமாகி ஆசி வழங்கினார். தமக்கு தரிசனம் தந்த இதே கோலத்தில் இங்கேயே எழுந்தருளி பக்தர்களை காத்தருளுமாறு வேண்டிய வால்மீகி முனிவரின் விருப்பப்படி, ஸ்வாமி இங்கு எழுந்தருளியுள்ளார்.
மண், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் - ஆகிய பஞ்ச பூதங்களும், நந்தி தேவரை அலட்சியம் செய்து, அவரது அனுமதி பெறாமல், கயிலாயத்திற்குள் நுழைந்து, தவத்திலிருந்த சிவபெருமானை தொந்தரவு செய்ததால், சாபத்திற்கு உள்ளாகி, குரங்கு வடிவம் பெற்று பூலோகம் வந்தனர்.
இத்தலத்திற்கு வந்து, கடுந்தவம் புரிந்து, சாப விமோசனம் பெற்றனர் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
கடும் பஞ்சத்தால் அவதியுற்ற மக்களை காப்பாற்ற, அட்சய பாத்திரம் கையில் ஏந்தி, மக்களுக்கும் பிற உயிர்களுக்கும் பஞ்ச காலம் முடியும் வரை பசியின்றிக் காத்தவள் அன்னபூர்ணாம்பிகை.
ஸ்தல வரலாற்றை விளக்கும் சுதைச் சிற்பங்களைக் காணலாம். பிரதோஷ வழிபாடுகள் சிறப்புற நடக்கின்றன.