ஸ்ருஷ்டியில் கொம்பு இல்லாமல் படைக்கப்பட்டிருந்த பசுக் கூட்டங்கள் ஒன்று சேர்ந்து பிற மிருகங்கள் மற்றும் மனிதர்களிடமிருந்து, தங்களுக்கு ஏற்படும் இன்னல்களை, பாதுகாப்பு வேண்டி இத்தலத்தில் தவம் மேற்கொண்டன.
பிரத்யட்சமான இறைவன், பசுக்களின் தற்காப்பிற்காக, கொம்புகளை கொடுத்து அருளினார். ஆக்கள் (பசுக்கள்) பூஜித்ததால் இவ்வூர் ஆமாத்தூர் எனப் பெயர் கொண்டது. பசுக்களின் தாயாக இருந்து, இறைவன் வரம் அருளியமையால் கோமாத்ருபுரம் என்றும் தாயூர் என்றும் அழைக்கலாயினர்.
இலங்கை செல்லும் வழியில், இத்தலம் வந்த ராம - லட்சுமணர்கள், அகஸ்தியரின் அறிவுரைப்படி, இவ்விறைவனை வழிபட்டுள்ளனர். ஸ்ரீ ராமர் வழிபட்டதால் இங்குள்ள மூலவரை அபிராமேஸ்வரர் என்று அழைக்கின்றனர்.
முன்னாளில, இவ்வாலயம் ஆற்றின் கீழ்க்கரையில் இருந்தது. அரசவை வந்த இரட்டை புலவர்கள், இவ்விறைவன் மீது பாடிய கலம்பகத்தில், மேல் கரையில் இருப்பதாக பாடி விட்டனர். பிழையை எடுத்துக் காட்டியவுடன் மிகவும் வருந்தினார்கள். அவர்களின் வாக்கு பொய்க்காமலிருக்க, இடப்பக்கம் ஓடிய பம்பை ஆற்றை, வலப் பக்கமாக ஓடச் செய்தார்.
இறைவியை விலக்கி, இறைவனை மட்டும் வலம் வந்து வழிபடும் சுபாவமுள்ள ப்ருங்கி முனிவரை சோதிக்க, இறைவனிடம் பாதி உடல் கேட்டுப் பெற்றாள் அம்பிகை. வண்டு உருவம் கொண்டு, உடலைத் துளைத்து வலம் வந்தார் ப்ருங்கி முனிவர். இதனால் கோபம் கொண்ட அம்பிகை, முனிவரை வன்னி மரமாக மாற சபித்து விட்டார் என்று வரலாறு.
இவ்வாலயத்து வட்டப்பாறை அம்மனின் அளவிட முடியாத சக்தியையும், சத்தியத்தை நிலைநாட்டுவது பற்றியும் வழக்கத்தில் உள்ள கதை ஒன்று ஐதீகமாக இருக்கின்றது.
செல்வந்தர் ஒருவர், இறக்கும் சமயத்தில், தனது சொத்துக்களை, தனது இரண்டு மகன்களுக்கும் சரிசமமாக பிரித்து எழுதி வைத்தார். தம்பியை வஞ்சிக்க நினைத்த அண்ணன், அத்தனை சொத்துக்களையும் விற்று, வைரம் மற்றும் ரத்னங்களாக மாற்றி, குழல் போலுள்ள தனது கைத்தடியில் மறைத்து வைத்து விட்டான்.
ஊருக்கு திரும்பி வந்த தம்பியிடம், தந்தை சொத்து ஒன்றும் மீதம் வைக்கவில்லை என்று பொய்யுரைத்தான். அண்ணனின் பேச்சை நம்பாத ஊர் பெரியவர்கள், வட்டப்பாறை அம்மன் முன்பாக அவனை நிறுத்தி, சத்தியம் செய்யச் சொன்னார்கள்.
தன்னிடமுள்ள கைத்தடியைத் தவிர தன்னிடம் ஒன்றுமில்லை எனக் கூறிவிட்டு, அந்த கைத்தடியை தன் தம்பியிடமே கொடுத்து, சிறிது நேரம் வைத்திருக்க சொல்லிவிட்டு, வட்டப்பாறை அம்மன் முன்னால் நின்று கொண்டு, என் கையில் ஒன்றுமேயில்லை என பொய் சத்தியம் செய்தான். பிறகு தம்பியிடமிருந்து கைத்தடியை வாங்கிக் கொண்டான்.
இந்த நிகழ்வைப் பற்றியும், தான் எப்படி சாமர்த்தியமாக தனது தம்பியை ஏமாற்றியதை பற்றியும், தனது நண்பர்களிடம் பெருமை அடித்துக் கொண்டிருந்த மூத்தவன், வட்டப்பாறை அம்மன் தன்னை ஒன்றும் செய்து விடவில்லை எனவும் இகழ்ந்தான்.
ஊர் ஜனங்கள் பார்த்து திகைக்க, திடீரென ஒரு நாகப்பாம்பு, வட்டப்பாறையின் கீழிருந்து சீறிக் கொண்டு கிளம்பி அவனை துரத்தியது. பயத்தால் தலைகால் தெரியாது ஓடினான். இங்கிருந்து 10 கி.மீ. தொலைவிலுள்ள தும்பூர் எனும் ஊரில், அவனை கடித்தது. கைத்தடி கீழே விழுந்து உருண்டு, அதிலிருந்த வைரங்கள் தரையில் சிதறி, அவனுடைய இழிசெயலை காட்டிக் கொடுத்து விட்டது.
இந்த பாம்பின் வால் திருவாமத்தூர் முத்தாம்பிகையின் திருமேனியை சுற்றிக் கொண்டும், பாம்பின் தலை தும்பூரில், நாகக்கன்னியாகவும் காணப்படுகின்றது.
தேவாரத்திருத்தலம்