பாண்டியனின் அரசவைக்குச் சென்ற இடைக்காடர், மன்னனைப் புகழ்ந்து பாடுகிறார். இடைக்காடரின் மனம் நோகும்படி பாண்டியனின் செய்கைகள் அமையவே, வருத்தமுற்ற இடைக்காடர், சோமசுந்தரக் கடவுளிடம் சென்று முறையிடுகிறார். தனது அடியவர்க்கு நேர்ந்த அவமானத்தைத் தெரிந்துகொண்டு கோபமுற்ற சிவபெருமான், பார்வதி தேவியுடன் கோவிலை விட்டு வெளியேறி, வைகை ஆற்றின் தென்கரையில் வந்து அமர்ந்துகொண்டார்.
மறுநாள் கோவிலுக்கு வந்த மக்கள், கோவிலில் இறைவன் இல்லாதிருப்பதைப் பார்த்து திகைத்து, ஓடோடிச் சென்று மன்னனிடம் முறையிட்டனர். தென்கரையிலுள்ள மக்கள் ஓடோடி வந்து, புதியதாக லிங்கம் தோன்றியுள்ளதாகத் தெரிவித்தனர்.
வைகைக் கரைக்கு விரைந்து வந்த மன்னன், "என்ன குற்றம் செய்தேன் இறைவா? ஏன் கோவிலை விட்டு வெளியேறி இங்கு வந்தீர்கள்?" என வினவினான். "இடைக்காடரை நீ அவமதித்ததினால் நான் இடம் பெயர்ந்தேன்" என அசரீரியான ஒலி கேட்டது. நடந்த தவற்றிற்கு மன்னிப்பு கோரிய மன்னன், மீண்டும் கோவிலில் வந்து எழுந்தருளுமாறு வேண்டினான். மன்னனின் வேண்டுகோளுக்கிணங்க சிவனாரும் மீண்டும் பழைய இடத்திற்கே வந்து கோவில் கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
பின்னர் இடைக்காடரைச் சபைக்கு அழைத்து கௌரவித்து, அவரது பாடலை அரங்கேற்றினான் மன்னன் என ஸ்தல புராணம் மேலும் கூறுகிறது.