108 திவ்ய தேச க்ஷேத்ரங்களுள், இந்த திவ்ய தேசத்தை கீழை வீடு என்பர். மேலை வீடு ஸ்ரீரங்கமாகும். ஸ்ரீமந் நாராயணன் எல்லா அக்ஷரங்களிலும் இந்த க்ஷேத்ரத்தில் ஸாந்நித்யம் செய்கிறபடியால், அஷ்டாட்சர மஹாமந்த்ர சித்தி க்ஷேத்ரம் என்ற பெருமைக்குரியது.
கிருஷ்ண க்ஷேத்ரம், கிருஷ்ணாரண்யம், கிருஷ்ணபுரம், நித்ய புஷ்கரிணி, உத்பலாவதக விமானம், காவிரி நதி, கிழக்கே சமுத்ரம் ஆகிய ஏழு புண்யங்களும் (க்ஷேத்ரம், வனம், நதி, கடல், நகரம், புஷ்கரிணி, விமானம்) ஒருங்கே அமைந்து உள்ளதால், திருவஷ்டாட்சர மந்திர ஸித்தி உடனே கிடைக்கும் என்பர்.
பிரயோக சக்கரம் ஏந்திய மூலவரின் வலது கரம், அடியான் ஒருவன் துயர் தீர்க்க விகடாட்சன் என்ற அசுரனைக் கொன்ற அவசரத்தையும், உபேந்திரனாய் அவதரித்து பெருமலைகளின் சிறகுகளை சிதைத்த அவசரத்தையும், காட்டி நிற்கின்றது.
மூலவரின் நெற்றியில் உள்ள வடு, அறையர் சுவாமி ஒருவர் கைத்தாளம் கொண்டு அடித்ததால் ஏற்பட்டது என்பர். விஷ்ணு ஆலயங்களை இடித்த சோழன் ஒருவனைப் பற்றி அறையர் முறையிட்டாராம். பெருமாள் வாளாவிருந்தாராம். இதனால் அறையர் கைத்தாளம் கொண்டு நெற்றியில் அடித்தாராம். அர்ச்சகர் கூறிய செய்தி இது.
தேவேந்திரனுக்கு உதவுவதற்காக தேவலோகம் சென்று, அங்கு தேவர்களை துன்புறுத்திக் கொண்டிருந்த அசுரர்களை வென்று, தேவர்களை மீண்டும் அவரவர் ஸ்தானங்களில் அமரச் செய்துவிட்டு, பூலோகம் திரும்பினான் உபரிசரவசு மன்னன். இறங்கியதும் இத்தலத்தில் ஒரு தினைத் தோட்டமும் புஷ்கரிணியும் இருக்கக் கண்டு, பசியாற முற்பட்டான். 16 வயது சிறுவன் ஒருவன் மன்னனை தடுத்ததோடு அல்லாமல், கைகலப்பிலும் இறங்கினான். சிறுவனிடம் தோல்வியுற்றான் உபரிசரவசு. பின்னர் சிறுவனின் சொல்படி திருக்குளத்தில் நீராடிவிட்டு, கரையேறியபோது ஒரு விமானத்தையும், அதில் ஸ்ரீ சௌரிராஜப் பெருமாள் இருப்பதையும் கண்டான்.
உத்பலர் என்ற ரிஷிகளே தினைக் கதிர்களாக இருப்பதாக அறிந்து கொண்டான். பின்னர் விஸ்வகர்மா துணைகொண்டு திருக்கண்ணபுரம் நகரை அமைத்தான். உபரிசரவசுவிற்கு அஷ்டாட்சர மந்திரத்தை உபதேசித்தருளினார் எம்பெருமான்.
விஷ்வக்சேனரிடம் உத்தரவு பெறாமல் நகரத்தைவிட்டு கிளம்பியதாலும், வேள்விச்சாலை ஒன்றில் தேவர்களுக்கும் - முனிவர்களுக்கும் நடந்த தர்க்கத்தில் நடுவராக இருந்து தேவர்களுக்கு சாதகமாக தீர்ப்பு கூறப் போய் முனிவர்களின் சாபத்திற்கு ஆளானதாலும், இறுதிக் காலத்தில் பாதாளம் போக நேரிட்ட உபரிசரவசுவை, கருடனை அனுப்பி அழைத்து வரச் செய்தார் சௌரிராஜப் பெருமாள். பின்னர் பெருமாளின் உபதேசம் பெற்று முக்தியடைந்தான் என ஸ்தல வரலாறு.
மீனவ ராஜாவான உபரிசிரவசுவின் மகள் பத்மினி மனதிற்குள் சௌரிராஜப் பெருமாளையே வரித்தாள். அவரையே திருமணம் செய்து கொள்ள பிடிவாதம் பிடித்தாள். அவளை மணந்து கொள்ள இசைந்த பெருமாள், வைகாசி பௌர்ணமியன்று அனுஷ நட்சத்திரம் கூடிய நாளில் அவளை மணந்தார்.
சகல சாஸ்திரங்களையும் பயின்ற அர்ச்சகர் ஒருவர் - பெருமாளையே பூஜித்து வந்தவர், விதி வசத்தால் கோவிலில் பணியாற்றும் கணிகை ஒருத்தியிடம் மனதை பறிகொடுத்தார். ஒரு நாள் அர்த்த ஜாமத்தின் போது, சோழ மன்னன் பெருமாளை சேவிக்க வந்தான். பெருமாள் மீதிருந்த மாலை ஒன்றை எடுத்து மன்னனுக்கு அணிவித்தார் அர்ச்சகர். அந்த மாலையில் ஒரு தலைமுடி இருந்தது கண்டு கோபம் கொண்டான் அரசன். அர்ச்சகரை காவலில் வைத்து மறுநாள் அரசவைக்கு கொண்டு வர உத்தரவிட்டான்.
கணிகைக்கு போட்டு அழகு பார்த்த மாலையை பெருமாளுக்கு சாத்திய பாவத்திற்காக வருந்திய அர்ச்சகர், இரவு முழுவதும் தூங்காமல், செய்த பிழையைப் பொறுத்தருளும்படி பெருமாளை வேண்டினார். ராஜதண்டனையிலிருந்து காப்பாற்றும்படி பிரார்த்தித்தார்.
மறுநாள் காலை பெருமாளை தரிசிக்க வந்த மன்னன், அவரது சிரசில் கற்றை கேசங்கள் கட்டுக்குடுமி போல் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டான். அணிவிக்கப்பட்ட மாலையில் முடி இருந்ததன் காரணத்தை அறிந்து கொண்ட மன்னன், அர்ச்சகரை விடுவித்தான். அர்ச்சகரை காப்பாற்ற பெருமாள் ஆடிய நாடகம். இந்த நிகழ்வினால் பெருமாளுக்கு சௌரிராஜப் பெருமாள் என்ற திருநாமம் கிடைத்தது.
முனியதரன் பெருமாளிடம் அளவற்ற பக்தியும், தனது மனைவி சமைத்த பொங்கலை சாப்பிடுவதற்கு முன் 'இவ்வடிசில் சௌரிராஜனுக்கு அர்ப்பணம்' என்று கூறிவிட்டு சாப்பிடுவது வழக்கம். ஒரு நாள் இரவு அப்படி சொல்லிவிட்டு சாப்பிட்டார். அந்த பொங்கலை பெருமாள் ஏற்றுக் கொண்டதன் அடையாளமாக, முனியதரன் வீட்டிலிருந்து மூலஸ்தானம் வரையிலும், பெருமாள் மீதும் பொங்கல் சிந்தியிருந்ததை மறுநாள் ஊர் மக்கள் கண்டனர்.
அன்று முதல் அர்த்த ஜாமத்தில் பெருமாளுக்கு பொங்கல் படைக்க ஏற்பாடு செய்தார் முனியதரன். அதற்கு வேண்டிய மான்யமும் அளித்தார். அன்று முதல் அந்த பிரசாதம் முனியோதரன் பொங்கல் என்ற பெயருடன் விநியோகிக்கப்படுகின்றது. (5 நாழி அரிசி, 3 நாழி பருப்பு, 2 நாழி நெய் என்ற விகிதாசாரத்தில் தயாரிக்கப்படுகின்றது.)
இங்குள்ள விமானத்திற்கு உத்பலாவதகம் எனப் பெயர். தேக சுகம் கருதாது வற்றி உலர்ந்த உடலை உடையவராகிய முமுக்சுக்களை உத்பலர் என்பர். அவரை ரட்சிக்கப் பரிந்தருளும் பெருமாள் உறையும் கருவறை விமானம் உத்பலாவதகம் எனப் பெயர் கொண்டதாக கூறுவர்.
இங்குள்ள நித்ய புஷ்கரிணி மிகவும் விசேஷமானது. புண்ய தீர்த்தங்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, பிரம்மனிடம் போய் தங்களது பாவங்களைத் தொலைக்க வழி கேட்டன. திருக்கண்ணபுரம் சென்று அங்குள்ள நித்ய புஷ்கரிணியில் நீராடி உங்கள் பாவங்களை தொலைத்துக் கொள்ளுங்கள் என்று பிரம்மன் கூறினாராம்.
விருத்திரன் என்ற அசுரனைக் கொன்று அதனால் ஏற்பட்ட பிரம்மஹத்தி தோஷம் நீங்க, நித்ய புஷ்கரிணி கரையில் இந்திரன் அஸ்வமேத யாகம் செய்ததாக ஸ்தல வரலாறு. குளக்கரையில் வட்டத்தின் மத்தியில் ராசி மண்டலத்துடன் கூடிய நட்சத்திரங்களையும், தேவியர்கள் சகித பெருமாளையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டான் என மேலும் கூறுகிறது.
இந்த புஷ்கரிணியில் நீராடிவிட்டு பித்ருக்களுக்கு காரியம் செய்தால் முன்னோர்கள் திருப்தியடைவர் என ஐதீகம். அப்படி செய்ய முடியாதவர்கள் நித்ய புஷ்கரிணியில் எள்ளைத் தெளித்து பிரார்த்தனை செய்தாலே முன்னோர்களின் ஆசி கிட்டும் என்பர். இதனால் இத்தலத்தை பித்ரு தோஷம் போக்கவல்ல ஸ்தலம் என்பர்.
மாசி மகத்தன்று, திருமலைராயன்பட்டினத்தில் உள்ள சமுத்ரத்தில் ஏழு பெருமாள்கள் சூழ தீர்த்தவாரி நடைபெறும். அப்போது மீனவர்கள் பெருமாளைத் தோளில் தூக்கியபடி செல்வர். பத்மினியை மணந்து கொண்டதால் மாப்பிள்ளையை கௌரவப்படுத்த இதனை செய்கின்றனர்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்களுள் ஒன்று - அஷ்டாட்சர மஹாமந்த்ர சித்தி க்ஷேத்ரம்