ஸ்ரீதர ஐயாவாள்:
மைசூர் மகாராஜாவின் மந்திரியான லிங்கார்யர் என்பவரின் பிள்ளை ஸ்ரீதர். அப்பாவையே உன்னிப்பாக கவனித்து அவரை முன்மாதிரியாகக் கொண்டு வளர்ந்த பிள்ளை.
அப்பா பிறரைச் சார்ந்து உழைப்பதால், சொந்த வித்தையை வளர்த்துக் கொள்ள அவகாசம் இல்லை என்று நினைத்தான். நல்ல மனம் படைத்தவர், சிறந்த நிர்வாகி என்றெல்லாம் பெயர்கள் எடுத்தும், கோபதாபங்கள் கொள்வதால் மன அமைதி இல்லாமல் இருக்கின்றார் என நினைத்தான்.
தந்தையின் சொத்துக்களிலோ, பெரிய பதவியிலோ நாட்டம் கொள்ளாமல், கோவில்களை அதிகமாகக் கொண்ட தமிழக காவிரிக்கரை ஓரமாக உள்ள கிராமம் ஒன்றினில் தங்கி இறை வழிபாடு செய்ய எண்ணி, திருவிசநல்லூர் வந்து அக்ரஹாரத்தில் வீடு எடுத்துக் கொண்டு தனது தாய் மற்றும் மனைவியுடன் இருக்கலானார்.
வேண்டும் - வேண்டாம் என்பதைத் தாண்டி, தன்னை அறிந்து கொள்ள முற்பட்ட ஸ்ரீதருக்கு, இறை வழிபாடு, நாம சங்கீர்த்தனம் ஆகியவற்றில் ஈடுபாடு ஏற்பட்டது. இதன் பிறகு ஸ்ரீதர வேங்கடேசன் என்று அழைத்தவர்கள் ஸ்ரீதர ஐயாவாள் என அழைக்கலானார்கள்.
தினமும் திருவிடைமருதூர் சென்று மஹாலிங்க ஸ்வாமியை தரிசிப்பது இவரது முக்கிய வேலை. இவருடைய தெய்வ பக்தியால் கவரப்பட்டவர்கள் அனேகம். ஷாஜி எனும் அரசனும், சரபோஜி மகாராஜாவும் இவரிடம் அடிக்கடி ஆலோசனைகள் பெறுவார்கள். அவர்கள் கொடுத்த திவான் பதவியையும் ஏற்க மறுத்துவிட்டார்.
இவருடைய செல்வாக்கைக் கண்டு பொறாமை கொண்டவர்கள் பலர். கோகுலாஷ்டமி உற்சவத்தை வெறும் பகட்டாக நடத்திக் கொண்டிருந்த வைணவ பக்தர்கள் சிலர், இவரை உதாசீனப்படுத்தினார்கள். கிருஷ்ணர் எனக்கு பிரியமானவர் என கண்களை மூடிக் கொண்டு வீட்டிற்குள் உட்கார்ந்திருந்தார் ஸ்ரீதர ஐயாவாள். வீதிவுலாவில் எடுத்துச் செல்லப்பட்ட கிருஷ்ணரின் படத்தில், கிருஷ்ணரைக் காணவில்லை. வெறும் சட்டமும் கண்ணாடியும் மட்டுமே இருந்தன. ஸ்ரீதர ஐயாவாள் வீட்டுக் கூடத்திலிருந்தார் கிருஷ்ணர்.
ஒரு நாள், தன்னுடைய தகப்பனாரின் சிரார்த்தம் சரிவர நடக்க வேண்டிய ஏற்பாடுகளை சிரத்தையாக செய்து முடித்து, ப்ராம்மணர்களின் வருகைக்காக காத்திருக்கையில், வறியவன் ஒருவன் பசி என்று கேட்டழுதான். அவன் மீது இரக்கம் கொண்டு சிரார்த்த உணவிலிருந்து கொஞ்சம் எடுத்து கொடுத்து விட்டார். இதைக் கவனித்த ப்ராம்மணர்கள் கோபம் கொண்டு தெவசம் செய்து வைப்பதை நிறுத்தி விட்டனர்.
எவ்வளவோ கெஞ்சியும் அவர்கள் இணங்கவில்லை. பிராயச்சித்தமாக கங்கையில் போய் குளித்துவிட்டு வா.. எனக் கேலி செய்தனர். இந்த கிராமத்தில் ஏது கங்கை, என அப்படிக் கூறி விட்டார்கள்.
உடனே தன் வீட்டுக் கிணற்றடிக்கு விரைந்தார் ஸ்ரீதர ஐயாவாள். கங்கா தேவியை மனதார பிரார்த்தித்து கங்காஷ்டகம் பாடினார். கிணற்றிலிருந்து பொங்கிப் பெருகி ஓடி வந்த நீர் எல்லோர் வீட்டு வாசலையும் நனைத்தது. கங்கையை நிரந்தர வாசம் செய்யும்படி வேண்டினார். அதில் குளித்துவிட்டு வந்தார். பார்த்துக் கொண்டிருந்த ப்ராம்மணர்கள் பிரம்மித்து நின்று விட்டார்கள். பின்னர் மும்மூர்த்திகளே வந்து ஸ்ரீதர ஐயாவாள் வீட்டு தெவசத்தை நடத்திக் கொடுத்தனர்.
கிணற்றிலிருந்து கங்கை பொங்கி வரும் நிகழ்வு, ஒவ்வொரு கார்த்திகை அமாவாசை தினத்தன்றும், அதாவது ஸ்ரீதர ஐயாவாளின் அப்பா தெவசமன்று, நடைபெறுகிறது. இன்றளவும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.
மழையின்றி வாடும் ஊர் மக்களுக்காக அபயம் தரவேண்டி பாடினார். பெரு மழை கொட்டியது. ஒரு நாள் மஹாலிங்க ஸ்வாமியின் நித்ய தரிசனத்திற்காக திருவிடைமருதூர் போய்க் கொண்டிருக்கையில் பெருவெள்ளம் சூழ்ந்ததால் கோவிலுக்கு போவது தடைப்பட்டது. மஹாலிங்கமே அர்ச்சகர் வடிவில் வந்து விபூதி பிரசாதம் கொடுத்துவிட்டு சென்றார். தன்னால் வெள்ளத்தை தாண்டி போக முடியாமல் இருக்கையில், அர்ச்சகர் எவ்வாறு வந்தார்? அவரது உடை வேறு நனையாமல் இருந்ததே.. என்று சிந்தித்ததில், வந்தது இறைவன் என்று தெரிந்து கொண்டார்.
"போதும் இந்த ஆட்டம்.. என்னை அழைத்துக் கொள்" என்று கூறிக் கொண்டே மஹாலிங்க ஸ்வாமியின் திருமேனியில் ஐக்யமானார்.