சுந்தரபத்திரன் எனும் அசுரன் தவம் செய்து பல வரங்களைப் பெற்றிருந்தான். இதனால் மமதை கொண்டு அனைவருக்கும் தொல்லைகள் கொடுத்து வந்தான். தனது மரணம் சிவ-சக்தி ஸ்வரூபமான ஒருவரால் மட்டும் சம்பவிக்க வேண்டும் என்றும், அவர் மனித அவதாரமும் எடுத்திருக்க வேண்டும் என்றும், வரத்தைப் பெற்றிருந்தான். இவனது இம்சைகளை பொறுக்க முடியாத தேவர்களும், முனிவர்களும் சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர்.
அசுரனை சம்ஹாரம் செய்ய உடனே புறப்படும்படி உமையவளுக்கு கட்டளையிட்டார் சிவபெருமான். கண்களை மூடி தியானத்திலருந்த அன்னை பதில் ஏதும் கூறாமலும் மௌனமாக இருந்தார். இதனால் கோபமுற்ற சிவபெருமான், பூலோகத்தில் மானிடப் பெண்ணாக பிறப்பாயாக என சபித்து விடுகின்றார்.
தியானம் கலைந்து கண் திறந்த அன்னை, என்னில் பாதியாக இருக்கும் தாங்களும் ஒரு நாழிகையாவது மனிதனாகப் பிறந்து பூமியில் அலைய வேண்டும் என சாபம் கொடுக்கின்றாள். இதனால் இறைவன் மனித அவதாரம் எடுத்து, தன் நிலை மறந்து, சித்தம் கலங்கி, பூமியில் அலைந்து திரிந்தார். அவரது நிலை கண்டு பார்வதியும், தேவர்களும் அச்சம் கொண்டனர்.
அன்னை பார்வதி தனது சூலாயுதத்தை தூக்கி வீசி எறிந்தாள். அது சென்று விழுந்த இடத்தில் பிரகாசமாக ஒளி வீசியது. அந்த ஒளியிலிருந்து சிவபெருமான் ஒரு நிலையாய் நின்று, திருநிலையாய் பாதம் பதித்து நின்றார். ஒரு நாழிகை கடந்ததால் மனித வடிவம் விடுத்து சிவபெருமானாக தோன்றினார். அன்னை பார்வதி அவரை வணங்கிய வண்ணம் தோன்றினாள். சூலாயுதம் விழுந்த இடத்தில் சிதறிய 21 மண் உருண்டைகள், 21 சிவ கணங்களாக மாறி, ஐயனை வணங்கி நின்றன.
மனிதனாக உலகை வலம் வந்து ஆண்டதால் பெரியாண்டவர் என்ற பெயர் கொண்டார். ஒரு நிலையாய் பாதம் பதித்த இடம் என்பதால் இவ்வூருக்கு திருநிலை எனப் பெயர் வந்தது. ஜோதியிலிருந்து தோன்றிய லிங்கம் என்பதால் தேஜோமயமாக இருக்கின்றார்.
தாயின் கருவிலிருந்து தோன்றாமல் சுயம்புவாக தோன்றியவர் பெரியாண்டவர் என்பதால் இத்தலத்தில் புத்திரபாக்கியம் வேண்டி நிற்பவர்களுக்கு உடனே பலன் கிடைக்கிறது.