இத்தலத்தில் வாழ்ந்த த்ருடநேத்ரர் எனும் முனிவரின் குடிலில், ராவண வதத்திற்கு பிறகு, வந்து தங்குவதாக வாக்களித்திருந்தார் ஸ்ரீ ராமர். அதன்படி முனிவரின் விருப்பத்திற்கிணங்க, இங்கு சிறிது காலம் தங்கினார். ராவண வத தோஷம் நீங்க, தங்கத்தினால் செய்த பசு ஒன்றை தானம் செய்தார் ஸ்ரீ ராமர். அந்த பசுவை தானமாகப் பெற்ற அந்தணர் இக்கோவிலைக் கட்டியதால் செம்பொன் செய் கோவில் எனப் பெயர் பெற்றது என ஸ்தல வரலாறு.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த முகுந்தன் என்பவன் இத்தலத்திற்கு வந்து பேரருளாளன் சந்நிதி முன்பாக அமர்ந்து அஷ்டாட்சர மந்திரத்தை இடைவிடாது (32000 தடவைகள்) உச்சரித்து வழிபட்டு பேரருளாளரின் அருளால் நற்பலன்கள் பெற்றதாக ஸ்தல வரலாறு.
பரமபதத்தில் இருக்கும் அருளாளன் இங்கு கோவில் கொண்டு சேவார்த்திகளை ரட்சிப்பதால் பேரருளாளன் என்ற திருநாமம் பெற்றார்.
108 திவ்ய தேசங்களுள் ஒன்று - திருநாங்கூர் திவ்ய தேசங்களுள் ஒன்று.
ஏகாதச ருத்ர பீடங்களுள் - சத்யோஜாத பீடம். மூலவர்: சொர்ணபுரீஸ்வரர் (காத்திருப்பு).
11 திவ்ய தேச ஸ்தலங்கள் தோன்றிய வரலாறு:
சிவபெருமானை யாகத்திற்கு அழைக்காமலும், யாகத்தின் அவிர்பாகத்தைத் தராமலும், அவமானப்படுத்தி தட்சன் செய்யும் யாகத்திற்கு அழைப்பின்றி போனாள் பார்வதி. எவ்வளவு அறிவுரைகள் கூறியும், காதில் வாங்கிக் கொள்ளாமல் செருக்குடன் யாகத்தைத் தொடர்ந்து நடத்தினான் தட்சன். யாகத்தைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்தில், யாக குண்டத்தில் குதித்து, தன் ஸ்தூல உடலை அழித்துக் கொண்டாள் பார்வதி.
நடந்தவைகள் அனைத்தையும் அறிந்து கொண்ட சிவபெருமான் ஆவேசம் கொண்டு ருத்ர தாண்டவம் ஆடினார். உக்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கையில், அவரது ஜடாமுடி தரையில் பட்டு, அதிலிருந்து ஒரு சிவன் தோன்றி, ருத்ர தாண்டவம் ஆடினார். இவ்வாறாக மூலசிவனின் ஜடாமுடி தரையில் படும் போதெல்லாம் ஒரு சிவன் தோன்றி ருத்ர தாண்டவம் ஆட, முடிவாக 11 ருத்ரமூர்த்திகள் ஆடிக் கொண்டிருந்தனர்.
11 சிவ வடிவங்கள் கோபாவேசமாக ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தால் உலகிற்கு அழிவு என கலக்கமுற்று பயந்த முனிவர்கள், திருமாலை சரண் அடைந்தனர். திருமாலும் 11 வித வடிவங்களில் தோன்றி, 11 சிவ தாண்டவர்கள் முன் நின்று, அவர்களை சாந்தப்படுத்தினார் என ஸ்தல வரலாறு.
சினம் தணிந்த சிவபெருமான், ஒவ்வொரு வடிவத்தையும் ஒருவருக்குள் ஒருவராகச் செலுத்தி, இறுதியில் ஒரே வடிவமாக நின்றார். தன்னைப் போலவே ஏகாதச வடிவங்கள் கொண்டு திருமாலும் எழுந்தருள வேண்டுமென சிவன் கோரியதால், இத்தலத்தில் 11 பெருமாள்களாக திருமால் சேவை சாதிக்கின்றார் என ஸ்தல வரலாறு.