முத்தரசபுரம் சிற்றரசருக்கு நாள்தோறும் பால்குடம் இவ்வழியே செல்வது வழக்கம். குறிப்பிட்ட இடம் வந்ததும் பால் குடம் கீழே விழுந்து உருண்டோடுவதும் வழக்கம். சந்தேகப்பட்ட அரசன் பூமியை அகழ்ந்து பார்க்க சொன்னான். அப்போது கிடைத்த சிவலிங்கமே இங்கு மூலவராக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. லிங்கத் திருமேனி மீது வெட்டுப்பட்ட காயம் தெரிகிறது.
ஸ்வாமி சந்நிதியின் தென்பக்கமாக ஒரு தேன் கூடு உள்ளது. சித்த புருஷர்கள் தேனீக்கள் வடிவில் இருந்து கொண்டு பூஜிப்பதாக கூறப்படுகின்றது. இந்த தேன் கூட்டிற்கும் நித்ய பூஜைகள் நடக்கின்றன.
இவ்வூரை சேர்ந்த வணிகன் ஒருவன், வர்த்தகம் செய்யும் பொருட்டு வேறு தேசம் போனான். கர்ப்பிணி மனைவியை இவ்வூரிலேயே விட்டுச் சென்றான். அவன் திரும்பி வர 4 - 5 வருஷங்களாயின. தினமும் இவ்வாயத்திற்கு வந்து இவ்விறைவனை வழிபடும் பழக்கத்திலுள்ள வணிகனின் மனைவி, வறுமையால் தான் படும் கஷ்டங்களை ஸ்வாமியிடம் எடுத்து சொல்வாள்.
அவளது சொப்பனத்தில் தோன்றிய இறைவன் தினமும் ஒரு பொன்காசை கோவில் சந்நிதியில் வைப்பேன் எனக் கூறினார். அடுத்துள்ள கிராமத்தில் இருந்த வணிகனின் கனவில் தோன்றிய இறைவன் இப்பெண் கொண்டு வரும் பொன்காசுக்கு உரிய பணத்தை தரும்படி கூறினார்.
அதன்படி தினமும் பொற்காசை எடுத்துக்கொண்டு, பணம் பெற்று, ஜீவிதம் நடத்தி வந்தாள் வணிகனின் மனைவி. அடுத்துள்ள கிராமம் பொன்னை நிறுத்துப் பார்த்து பணம் தந்ததால் பொன்னிறை எனப் பெயர் கொண்டது.
வேற்று தேசம் சென்ற வணிகன் திரும்பி வரும் போது அவனது குழந்தை வளர்ந்து 5வயது பாலகனாக இருந்தான். ஊர் மக்கள் அவனது மனைவியைப் பற்றி அவதூறாகப் பேசி அவளது நடத்தையை சந்தேகித்தனர்.
கணவனின் சந்தேகத்தை தீர்க்க வேண்டி, அப்பெண் கோவிலில் மணி அடித்து, ஸ்வாமியிடம் முறையிட்டு அழுதாள். அவளது பிரார்த்தனைக்கு செவி சாய்த்த இறைவன் அவள் பதிவிரதை என நிரூபிக்க - கோவிலின் பின்னாலிருந்த ஆத்தி மரம், கோவிலுக்கு முன்னால் இடம் பெயர்ந்தும், நந்தி மற்றும் பலிபீடம் நகர்ந்தும் சாட்சி தந்தன. இந்த நிகழ்வை சிவபெருமான் அந்த பெண்ணுக்காக செய்தருளினார் என ஸ்தல வரலாறு.
தேவாரத்திருத்தலம்