அகஸ்தியரின் சீடரான உரோமச முனிவர்க்கு, ஸ்வாமி இங்கு குருவாகக் காட்சி தந்தார் என்பதனால் சிவபெருமானே இங்கு ப்ரஹஸ்பதியாகவும் அருள் புரிகின்றார்.
உரோமச முனிவர் தமது குருவான அகஸ்திய பெருமானிடம், சிவ கடாட்சம் பெற்று முக்தியடைய வழி கேட்டார். அதற்கு அகஸ்தியர், "நீ பொருணை ஆற்றின் கரை வழியாக சங்கு முகம் வரைக்கும் செல். உனக்கு வழி காட்ட ஆற்று நீரில் ஒன்பது மலர்களை விடுகிறேன். ஒவ்வொரு மலரும் எந்த இடத்தில் ஒதுங்குகிறதோ, அங்கெல்லாம் சிவலிங்கத்தை ஸ்தாபித்து வழிபடு" என்றார். (சங்கு முகம் என்பது பொருணை ஆறு கடலில் சங்கமிக்கும் இடம்).
அகஸ்தியர் கூறியபடியே உரோமச முனிவரும் ஒவ்வொரு பூ கரை ஒதுங்கிய இடங்களிலும் (ஆற்றின் இரு கரைகளிலும்) சிவலிங்கம் நிறுவி வழிபட்டார். மிதந்து வந்த மலர்களுள் ஐந்தாவது மலர் கரை ஒதுங்கிய இடமே முறப்பநாடு.
ஒவ்வொருவர் ஜாதகத்திலும் குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட கிரகங்களின் தசை ஆட்சி புரியும். ஒவ்வொரு தசைக்கும் ஒவ்வொரு கிரகம் அதிபதி. ஒவ்வொரு தசையின்போதும் எந்த கோவிலுக்கு சென்று வழிபட்டால் நற்பயன் பெறலாம் என விளக்க சிவபெருமான் அந்தந்த கிரகங்களாக இருந்து அருள் புரிவதாக ஐதீகம்.
நவகோள்கள் ஒவ்வொன்றும் நவ (9) கயிலாயங்களில் ஆட்சி செலுத்துவதாக ஐதீகம். குரு பகவானின் ஆட்சி பெற்று இத்தலத்தில் சிவபெருமானே இங்கு குருவாக இருப்பதால், நவ கயிலாயங்களுள் இதை குருவின் ஸ்தலம் என்கின்றனர்.
சோழ மன்னன் ஒருவனுக்கு குதிரை முகம் கொண்ட பெண் குழந்தை பிறந்தது. குழந்தையின் முகத்தை மாற்றித் தருமாறு சிவபெருமானிடம் வேண்டி, இத்தலத்தில் தவமியற்றினான். கைலாஸநாதரின் அருளால் குழந்தையின் குதிரை முகம் மாறியது. பெண் குழந்தையின் பூர்வ ஜென்ம பாவத்தை நந்தி தேவர் ஏற்றுக் கொண்டதனால் நந்திக்கு குதிரை முகம் கிடைத்தது என ஸ்தல புராணம் கூறுகிறது.
அசுரர்களின் தொல்லைகளைப் பொறுக்க முடியாமல் முனிவர்கள் எல்லோரும் சிவபெருமானிடம் சென்று முறைப்பாடு செய்தமையால் இவ்வூருக்கு முறப்பநாடு எனப் பெயர் வந்தது. 'முறம்பு' என்ற சொல்லுக்கு 'பருக்கை கற்கள்' என்று பொருள். பருக்கை கற்கள் நிரம்பிய மேட்டு நிலம் என்பதாலும் இவ்வூருக்கு இப்பெயர் வந்ததாகக் கூறுவர்.
ஸ்ரீ ராமபிரான் சிவபெருமானை வழிபட்ட ஸ்தலம். காஞ்சனமாலைக்கு மோட்சம் கிடைத்த ஸ்தலம்.
ம்ருகண்டு முனிவர் பாதயாத்திரை செய்த ஸ்தலம். மார்க்கண்டேயரின் வம்சத்தினர் வழிபட்ட ஸ்தலம்.
இத்தலத்தில் பொருணை ஆறு வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்வதால் தட்சிண கங்கை என்று அழைக்கின்றனர்.