திருமாலின் கண்களிலிருந்து வெளிப்பட்ட ஆனந்தக் கண்ணீரின் இரு சொட்டுக்கள், இரண்டு பெண் குழந்தைகளாக மாறின. அமுதவல்லி, சுந்தரவல்லி எனப் பெயர்களைக் கொண்டு வளர்ந்து வந்தனர்.
இருவரும் ஒரே கணவனை அடையும் வரம் பெற்றவர்கள்.
அமுதவல்லி ஐராவதத்தால் வளர்க்கப்பட்டு தெய்வயானையாக முருகப் பெருமானை மணந்தாள்.
வள்ளிக்குழி என்ற இடத்தில் வேடுவனான நம்பிராஜனால் கண்டெடுக்கப்பட்ட சுந்தரவல்லி, குறத்தியாக வளர்ந்து, தினைப்புனத்தைக் காவல் காக்க அனுப்பப்பட்டாள். பின்னர் வள்ளியாக முருகப் பெருமானை மணக்கிறாள்.
தினைப்புனத்தைக் காவல் காத்த வள்ளியே இங்கு ஸ்ரீ காத்தாயி அம்மனாக எழுந்தருளியுள்ளார்.
ஆச்சார அனுஷ்டானங்களைக் கடைப்பிடிக்கும் ஒரு பிராம்மணன் இவ்வூரின் வழியே போய்க் கொண்டிருந்தபோது, அசரீரி ஒலி கேட்டது. தான் இங்கு காவல் தெய்வமாக வரப்போவதாக அன்னை தெரிவித்தாள். ஏதோ தெய்வீக சக்தி அங்கிருப்பதை உணர்ந்த பிராம்மணன், அரச மரத்தடியில் குங்குமக் குவியலைக் கண்டான். தினமும் அந்தக் குங்குமக் குவியலைப் பூஜிக்கலானான்.
வெயில் வரும்போது சூரியனின் வெப்பம் குங்குமக் குவியல் மீது படாமல் இருக்க, தனது கைகளை குடை போல் வைத்து நிழல் தருவான். மழை வந்தால் என்ன செய்ய எனக் குழம்பிய பிராம்மணன் ஒரு களிமண் சிலை செய்து பூஜிக்கலானான்.
ஒரு நாள் தனித்தமர்ந்து தியானம் செய்து கொண்டிருக்கையில், மனதிற்குள் அம்மனை உருவகப்படுத்தத் தலைப்பட்டான். மனக்கோயில் உருவகமாகப் பலவித கட்டங்கள் உருவங்களாகி, முக்கோணங்களாக மாறின. மொத்தம் 43 முக்கோணங்கள். அதிலிருந்து தோன்றிய அழகான திருவுருவத்தைப் பார்த்ததும், அந்த திருவுருவத்தையே பூஜிக்க முடிவு செய்தான்.
மண் சிலையை ஆற்றினில் போட்டுவிட்டான்.
மனதில் தோன்றிய திருவுருவம் மறைந்தது. தனது தவற்றிற்காக வருந்தி அழுதான். பயனில்லை. பின்னர் தன்னையே அழித்துக் கொள்ள முற்பட்டபோது, அசரீரி ஒலித்தது. தான் ஆற்றில் அடித்துக் கொண்டு வரப்படுவதாகத் தெரியப்படுத்தினாள்.
ஆற்றில் கிடைத்த திருவுருவத்தைப் பிரதிஷ்டை செய்துள்ளனர். ஒட்டியாண ரூபிணியாக ஞானாம்பிகை எழுந்தருளி தரிசனம் தருகின்றாள்.
கஞ்சமலை சித்தர் பொறுப்பில் உருவான திருக்கோவில். சித்தர்கள் ஆடிய பூமி என்பதனால் சித்தாடி எனப் பெயர் பெற்றது.