பாற்கடல் சென்று க்ஷீராப்திநாதனை வழிபட எண்ணிய புண்டரீக மகரிஷி, அவர் திருவடிகளில் சேர்க்க தாமரை புஷ்பங்களைப் பறித்துக் கொண்டு, பயணத்தை மேற்கொள்கின்றார். அகண்ட சமுத்திரம் வழியை அடைத்துக் கொண்டு இருப்பதைக் கண்டு, வழி மறிக்கும் கடலை அப்புறப்படுத்தும் வகையில் தனது கைகளால் வாரி இறைக்கத் தொடங்கினார். கடல் நீரை இறைத்து வழி உண்டாக்கி விடலாம் என்ற நம்பிக்கையில் தளரா மனதுடன், நீரை வாரி இறைக்கும் பணியில் ஈடுபட்டார்.
இரவு பகலாகப் பல நாட்கள் கடந்தன. இருப்பினும் சோர்வடையாது நீரை இறைத்துக் கொண்டிருந்தார். வயதான முதியவராக வேடம் பூண்டு எம்பெருமான் மகரிஷி முன்பாக தோன்றினார். புண்டரீக மகரிஷியை அழைத்து தனக்கு பசிக்கிறதென்றும், ஆகாரம் ஏதாவது தருமாறும் வேண்டினார்.
"நான் போய் ஆகாரம் கொண்டு வருகிறேன், அது வரை இந்த கடல் நீரை வாரி இறைத்துக் கொண்டிரும்" என்று கூறி விட்டு, பூக்கூடையை அவரிடம் தந்து விட்டு சென்றார் மகரிஷி.
மகரிஷி சென்றதும், அவர் தந்து விட்டுச் சென்ற மலர்களை தனது மேல் சாற்றிக் கொண்டு, கடல் மணலைக் குவித்து தலைக்கு வைத்துக் கொண்டு, தரையிலே சயனித்து விட்டார் முதியவராக வந்த எம்பெருமான்.
முதியவர் வேடம் களைந்து எம்பெருமானாகவே சயனித்தார்.
யாரை சேவிக்க பயணம் மேற்கொண்டு கடல் நீரை வாரி இறைத்துக் கொண்டிருந்தாரோ, அந்த க்ஷீராப்திநாதர் இங்கு சயனித்திருப்பதைப் பார்த்ததும் மகரிஷி மகிழ்ச்சியில் திக்குமுக்காடிப் போனார். பின்னர் தாம் சேவித்தபடியே, சேவார்த்திகளும் சேவிக்க ஏதுவாக, இத்தலத்திலேயே இருக்கும்படி வேண்டினார்.
எம்பெருமான் தனது பாம்பணையின்றி தரையில் சயனித்ததால் ஸ்தல சயனப் பெருமாள் எனத் திருநாமம் கொண்டார் என ஸ்தல வரலாறு.
இது 108 திவ்ய தேசங்களுள் ஒன்று.