ஆதியில் வில்வவனமாக இருந்த இப்பகுதியில், வேடன் ஒருவன் கையில் வில்-அம்புடன் புறப்பட்டு வழியில் கண்ட மானை துரத்தலானான். அங்கே தவம் செய்து கொண்டிருந்த முனிவரிடம் தஞ்சம் புகுந்தது மான். "மானைக் கொல்ல வேண்டாம்... விட்டு விடு..." என உபதேசித்தார் முனிவர். மான் தனக்கே உரியது என வாதிட்ட வேடன், மானைத் தராவிட்டால் முனிவரையும் கொன்று விடுவதாக பயமுறுத்தினான்.
திடீரென ஒரு புலி வேடன் மீது பாயலாயிற்று. பயத்தில் அலறியபடியே வேடன் அருகிலிருந்த வில்வ மரத்தில் ஏறிக் கொண்டான். புலியும் விடுவதாக இல்லை... அவன் மரத்திலிருந்து இறங்குவதற்காக மரத்தடியில் காத்திருந்தது.
"தூங்கினால் மரத்திலிருந்து விழ நேரிடும், பின்னர் புலிக்கு இரையாக நேரிடும்" என பயந்த வேடன், இரவு முழுவதும் மரத்திலிருந்தபடியே வில்வ இலைகளைப் பறித்துப் போட்டுக் கொண்டிருந்தான். மரத்தடியில் சுயம்புவாக தோன்றி இருந்த சிவலிங்கத்தின் மீது, வேடன் பறித்துப் போட்ட வில்வ இலைகள் விழுந்தன. பிரத்யட்சமான சிவபெருமான் வேடனுக்கு முக்தி அளித்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
அடுத்த நாள் காலை முடிவடையப் போகும் வேடனின் உயிரை எடுக்க வந்த யமனை, வாசல் பக்கமாக திரும்பிய நந்திதேவர் தனது மூச்சுக் காற்றால் நிறுத்தி தடுத்து விட்டார் என்றும், கையில் கழியுடன் இருக்கும் தட்சிணாமூர்த்தி யமனை விரட்டியடித்து விட்டதாகவும் ஸ்தல புராணம் மேலும் கூறுகிறது.
மஹாசிவராத்திரி நாளன்று நான்கு கால பூஜைகளையும் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இதில் கலந்து கொண்டு, நான்குவித நைவேத்யங்களை செய்து வில்வவனேஸ்வரரை வழிபட்டால் சகல பாவங்களும் விலகும். சிவராத்திரியன்று இரவு 11.30 க்கு மேல் 1.00 மணி வரை உள்ள கால அளவை லிங்கோத்பவ காலம் என்பர். பஞ்சாட்சர தியானம் செய்ய உகந்த நேரம்.
தேவாரத் திருத்தலம்.