அம்மையப்பரைச் சுற்றி வந்து, விநாயகர் மாங்கனியைப் பெற்றுக் கொண்டதால் இவ்வூருக்கு திருவலம் என்று பெயர் வந்ததாக கூறுகின்றனர். ஏதாவதொரு தீர்த்தத்தில் நீராடி, மலர்களால் சிவலிங்கத்தை அர்ச்சித்து, சிவபூஜை செய்ய பிரியம் கொண்டாள் பார்வதி தேவி. இத்தலத்தின் வடகிழக்கில் ஓடிக்கொண்டிருந்த நதியை, சிவபெருமான், "நீ வா" என்று கூப்பிட்டதால் இந்த நதிக்கு "நீ வா நதி" என்றே பெயர். (தற்போது பொன்னை என்று பெயர்).
இறைவனின் அபிஷேகத்திற்கு நீர் எடுத்து வரும் பக்தர்களை வழி மறித்து துன்புறுத்தி வந்தான் கஞ்சன் எனும் அசுரன். அவனுக்கு புத்தி புகட்டி பக்தர்களை காக்கும்படி கூறி நந்தியை அனுப்பினார் சிவபெருமான்.
போரில் மீண்டும் மீண்டும் உயிர்த்தெழுந்த அசுரனை கண்டதுண்டமாக வெட்டி, உடலின் பாகங்களை சிதறி விழச் செய்கிறார் நந்தியம் பெருமான். தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்ட கஞ்சனை மன்னித்து, தனது பூதகணங்களுள் ஒருவராக ஆக்கிக் கொண்டார் சிவபெருமான். தொடர்ந்து காவல் புரியும் பொருட்டு நந்தியம் பெருமான் எதிர்புறமாக திரும்பியே நிலை கொண்டுள்ளார்.
கஞ்சனுக்கு முக்தி தந்த நாளில், காஞ்சனகிரியில் ஸ்வாமி எழுந்தருளும் விழா நடைபெறும். அந்த நாள் சித்ரா பௌர்ணமியில் வரும். அன்று இரவு 12 மணிக்கு காஞ்சனமலையிலிருந்து ஜோதி தெரிவதாக கூறுகின்றனர்.