மூலவர்: வாலீஸ்வரர், அம்பாள்: ஆனந்தவல்லி.
மூலஸ்தானத்தில் சிவலிங்க வடிவினராக எழுந்தருளி அருள் புரிகின்றார் வாலீஸ்வரர். சதுர வடிவ ஆவுடையாருடன் கூடிய ஒளி வீசும் அழகிய சிவலிங்க மூர்த்தம். தேவதச்சன் விஸ்வகர்மாவால் நிறுவப்பட்ட தேவலிங்கம். இவருக்கு பால் அபிஷேகம் செய்தால் வழியும் பால் கருநீலக் கோடுகளாக தெரிகின்றன. இதைப் பருகுபவர்களுக்கு கால சர்ப்ப தோஷம் நீங்கும் எனக் கூறுவர். வாலி வழிபட்டு பூஜித்ததால் வாலீஸ்வரர் எனும் திருநாமம்.
அம்பாள் ஆனந்தவல்லி தெற்கு பார்த்து தனி சந்நிதி கொண்டு எழுந்தருளி அருள்பாலிக்கின்றாள். பாசம்-அங்குசம், அபய-வரதம் கொண்ட சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி. எலுமிச்சம்பழமாலை சாற்றுவது விசேஷம்.
இங்குள்ள கார்யசித்தி கணபதி வரப்ரசாதியாக பிரசித்தம். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருவுருவம். மேற்கரங்களில் மழு, உத்ராட்ச மாலை, கீழ்க்கரங்களில் தந்தம், மோதகம் ஆகியன கொண்டுள்ளார். அடிப்பீடம் குறுகலாகவும், இடையில் சற்று அகன்றும், நுனியில் கூர்மையாகவும், தாமரை மொட்டைப் போல, அபூர்வமான விக்ரஹமாக தரிசனம் தருகின்றார்.
கார்யசித்தி கணபதியின் முன்பாக அரிசியை படைத்து, தேங்காயை கையில் வைத்தபடி, 16 முறை வலம் வந்து, சிதறு காய் உடைத்தால் காலசர்ப்ப தோஷம் விலகும், திருமணத்தடை நீங்கும் என்பது நம்பிக்கை.
ராகு தோஷம் கொண்டவர்களுக்கு, பரிகார ஸ்தலமாக விளங்குகிறது.
ஸ்ரீ வாலீஸ்வரர் - உமாமகேஸ்வரியை, நின்ற கோலத்தில், ஆலிங்கனம் செய்யும் பிரதோஷ நாயகரின் திருவுருவம் அற்புதமாக உள்ளது. ஜ்வாலையுடன் கூடிய சாந்த துர்க்கை, மஹாவிஷ்ணு, பிறை சூடிய சண்டேஸ்வரர் ஆகிய மூர்த்தங்களை தரிசிக்கலாம்.
சூரியன், சப்த கன்னியர்கள், வாலி, பராசர முனிவர் ஆகியோர் வழிபட்டு பூஜித்த லிங்கம். கிரக பீடை, கிரக தோஷங்கள் நீங்க, வாலீஸ்வரரை தரிசித்து வழிபடுவது நலம்.
நந்தியம்பெருமான் காலை ஒரே மாதிரி மடக்கி படுத்திருப்பது வித்தியாசமான அழகு. தலையை சாய்த்து மிடுக்காக மூலவரை பார்க்கும் தோரணையில் காணப்படுகின்றார். கீழே தாமரைப் பூ வடிவில் பலிபீடம்.