மது-கைடப அசுரர்கள், பிரம்மாவிடமிருந்து வேதங்களை அபகரித்து, கடலுக்கடியில் ஒளித்து வைத்த போது, மத்ஸ்ய அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, அசுரர்களை அழித்து, வேதங்களை மீட்டார். அசுர சம்ஹாரம் செய்த தோஷம் நீங்க இத்தலத்திற்கு வந்து, லிங்கப்ரதிஷ்டை செய்து, வழிபட்டார் என ஸ்தல வரலாறு.
காலப்போக்கில், பூமியில் புதையுண்டு, சுற்றிலும் மூங்கில் காடு வளர்ந்தது. மூங்கில் காட்டில் உள்ள பெரிய புற்று ஒன்றின் மீது, தினமும் பசு ஒன்று தானாக வந்து, பாலைப் பொழிவதை வழக்கமாக கொண்டதாம். இதைக் கண்ணுற்ற வேடர்களில் சிலர், புற்றை கோடரியால் கிளறி பார்த்தனர். புற்றின் அடியிலிருந்து சிவலிங்கம் வெளிப்பட்டது. லிங்கத் திருமேனியில் கோடரி வெட்டு தழும்பும் ஏற்பட்டது.
திரு - பாசு - ஊர் திருப்பாசூர். பாசு என்றால் மூங்கில் என்று பொருள். வேய் என்றாலும் மூங்கில் என்றே அர்த்தம். மூங்கிலடியிலிருந்து சுயம்புவாக தோன்றியருளியதால் பாசூர் நாதர் என்றும் வேயின்ற நாதர் என்றும் அழைக்கின்றனர்.
சமணர்கள் ஒரு பெரிய பாம்பைப் பிடித்து குடத்தில் அடைத்து, கரிகால சோழனுக்கு அனுப்பி வைத்தனர். சிவபெருமான் அந்த பாம்பை எடுத்து ஆட்டியருளிய ஸ்தலம். கரிகால சோழன் இந்த கோவிலை கட்டி, இவ்விறைவனை வழிபட்டதாக வரலாறு.
தேவாரத் திருத்தலம்