மூலவர்: ஸ்ரீ வர்த்தமானேச்வரர், ஸ்ரீ பூதேச்வரர், ஸ்ரீ பவிஷ்யேச்வரர். அம்பாள்: ஸ்ரீ மனோன்மணி.
நிகழ்காலம், இறந்த காலம், எதிர்காலம் என இத்தலத்தில் மூன்று காலங்களாக விளங்கும் இறைவனை அப்பர் பெருமான் புகழ்ந்து பாடியுள்ளார். வர்த்தமான, பூத, பவிஷ்ய எனும் மூன்று லிங்கங்களே மூன்று காலங்களாக உள்ளனர்.
அக்னீஸ்வரருக்கு வலப்புறமாக ஸ்ரீ வர்த்தமானேச்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை ஜமதக்னி முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இவர் நிகழ்காலத்திற்குரியவர்.
அக்னீஸ்வரருக்கு தென்புறமாக ஸ்ரீ பூதேச்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை காசியப முனிவர் பிரதிஷ்டை செய்துள்ளார். இவர் இறந்த காலத்திற்குரியவர்.
வடக்கு பிரகாரத்தில் ஸ்தல விருட்சத்திற்கு அருகாமையில் ஸ்ரீ பவிஷ்யேச்வரர் எழுந்தருளியுள்ளார். இவரை வியாச மகரிஷி பிரதிஷ்டை செய்துள்ளார். இவர் எதிர்காலத்திற்குரியவர்.
உட்பிரகாரத்தில் - பிருகு, பராசரர், ததீசி, புலஸ்தியர் ஆகியோர் வழிபட்ட லிங்கங்களையும், வாமதேவர் பூஜித்த லிங்கம் சண்டிகேஸ்வரரின் அருகிலும், இரண்டாவது பிரகாரத்தில் பரத்வாஜர் பூஜித்த லிங்கத்தையும், தெற்கு பிரகாரத்தில் நர்த்தன கணபதியை அடுத்து மகாவிஷ்ணு வழிபட்ட லிங்கத்தையும், மடைப்பள்ளியை அடுத்துள்ள சந்நிதியில் சிந்தாமணீச்வரரையும் தரிசிக்கலாம்.
உட்பிரகாரத்தில் காசி விஸ்வநாதருக்கும் காலசம்ஹார மூர்த்திக்கும் இடையே திரிமுகாசுரனின் உருவத்தைக் காணலாம். பறவை, பன்றி, மனிதன் ஆகிய மூன்று முகங்களைக் கொண்டவன் திரிமுகாசுரன். இவ்விறைவனை வழிபட்டு வந்த அவன், தனது தகாத குணங்களாலும், கந்தமாதன முனிவரைக் கொல்ல முயன்றதாலும், திருப்புகலூர் இறைவனால் சம்ஹாரம் செய்யப்பட்டான்.
வெளிப்பிரகாரத்தில் யாகசாலையருகேயுள்ள மண்டபத்தில் அப்பர் பெருமான் இறைவனுடன் ஐக்யமாகும் காட்சி புடைப்புச் சிற்பமாக காணப்படுகின்றது.
வைதீகப் பிராம்மணரான முருக நாயனார், சிவபெருமானுக்கு திருமாலைக் கட்டும் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். மனோன்மணி அம்பாள் சந்நிதியின் எதிரே முருக நாயனாரின் உருவத்தைக் காணலாம். முருக நாயனார் நந்தவனத்தையடுத்து சூளிகாம்பாள் பசுமடம் உள்ளது. அபிஷேகப் பால் இங்கிருந்து செல்கிறது.