ஊடலின் காரணமாக கோபம் கொண்ட மஹாலட்சுமி திருமாலை பிரிந்து பூலோகம் வந்தார். மனக் குழப்பத்திலிருந்த திருமாலை கந்தாரண்யம் சென்று வாஞ்சிநாதரை வழிபடுமாறு அசரீரி வாக்கு கூறியது. திருமாலும் இத்தலத்திற்கு வந்து வாஞ்சிநாதரை வழிபட்டு லட்சுமியை மீண்டும் அடைந்தார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
இத்தலத்தில் தீர்த்தம் ஒன்றை உண்டாக்கி வழிபட்டு தவம் செய்து கொண்டிருந்தாள் லட்சுமி. இதற்கு லட்சுமி தீர்த்தம் என்று பெயர். கோவிலுக்கு மேற்கேயுள்ளது. வெள்ளிக்கிழமைகளில் இதில் நீராடி சூரிய அஸ்தமன வேளையில் விளக்கேற்றி வைத்து லட்சுமியை பூஜிக்கின்றனர்.
ஆதிசேஷன் இங்கு சேஷ தீர்த்தம் ஏற்படுத்தி தவம் மேற்கொண்டுள்ளார். இதில் நீராடுபவர்களுக்கு நாக தோஷம் விலகும் என்பர். சக்கரத்தாழ்வாரும் இங்கு சக்கர தீர்த்தம் உண்டாக்கியுள்ளார். இதில் நீராடிய பரசுராமர் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப் பெற்றார் என ஸ்தல வரலாறு.