திருநெய்ப்பேறு எனும் இவ்வூரில் அந்தணக் குலத்தில் பிறந்த நமிநந்தி அடிகள், சிவாலயத்தில் தினமும் நெய்விளக்கு ஏற்றி வழிபடுவதைத் தொண்டாக செய்து வந்தார். ஒருநாள் திருவாரூர் சென்று தியாகேசனை வழிபட்டுவிட்டுத் திரும்பும்போது, மழை மேகம் சூழ்ந்ததாலும், நெடுந்தூரத்திலுள்ள தன் வீட்டிற்குப் போய் நெய் எடுத்து வர இயலாததாலும், அருகே கடை ஏதும் இல்லாததாலும், அருகே உள்ள வீட்டில் நெய் கடனாகக் கேட்கலாம் என்று முடிவெடுத்தார்.
அந்த வீட்டிற்குரியவர் ஒரு சமணர். "கனலைக் கையில் வைத்திருக்கும் உமது இறைவனுக்கு விளக்கு ஏன்?" என நையாண்டி செய்தார் சமணர். "அவசியமானால் தண்ணீர் விட்டு விளக்கேற்று" எனக் கூறி, கதவைச் சாத்தி, அவமானப்படுத்தி விட்டார்.
மனம் வருந்திய நிலையில் குளத்திற்குச் சென்ற நாயனார், குளத்து நீரைக் கொண்டு வந்து, விளக்கில் ஊற்றி தனது பக்தியை நிலை நாட்டினார். விளக்குகள் அனைத்தும் பிரகாசமாக எரிந்தன. இதைக் கண்ணுற்ற சமணர்கள் அனைவரும் சிவபெருமானின் பெருமையை உணர்ந்து சைவத்திற்கு மாறினர்.
இந்த நிகழ்விற்குப் பிறகு, திருக்கோவிலைப் பார்த்துக் கொள்ளும் தலைமைப் பணியை நமிநந்தி அடிகளிடம் ஒப்படைத்தான் சோழ மன்னன்.
தேவார வைப்புத்தலம்.