சிவபெருமான் தட்சிணாமூர்த்தியாக எழுந்தருளியிருந்த காலத்தில், மன்மதன் பாணம் வீசியதால், நெற்றிக்கண்ணை திறந்து, சுட்டெரித்து, பின்னர் யோகத்தை முடிக்க உகந்த இடம் இதுவென, இத்தலத்தில் எழுந்தருளியதாக கூறுவர்.
நிசும்பன், சும்பன் எனும் இரண்டு அசுரர்கள், தேவர்களையும், முனிவர்களையும் துன்புறுத்தி வந்தனர். இதிலிருந்து விடுபட அவர்கள் பரமேஸ்வரியிடம் முறையிட்டனர். பரமேஸ்வரி தனது குருதியின் மூலம் உருவாக்கப்பட்ட காளி தேவியை ஏவி, அசுரர்களின் கொட்டத்தை அடக்கி, அவர்களை சம்ஹாரம் செய்தாள்.
அசுரர்களின் ரத்தத்தைக் குடித்ததால் அசுர குணம் கொண்ட காளி, ரத்த வெறி கொண்டு, அட்டகாசம் செய்யலானாள். இதனைக் கண்டு பயந்த மகரிஷிகள், சிவபெருமானிடம் சென்று முறையிட்டனர். கோர வடிவம் ஒன்றை எடுத்து காளியை அடக்க, திருவாலங்காட்டை அடைந்தார் சிவபெருமான்.
சூழ்ச்சியால் வெற்றி கொள்ள எண்ணிய காளி, சிவபெருமானை நடன போட்டிக்கு அழைத்தாள். சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவம் ஆடி, காளியை வெற்றி கொண்டார் என ஸ்தல வரலாறு கூறுகிறது.
முக்தி தீர்த்தக் கரையில், சுனந்த முனிவரும், கார்க்கோடகனும் பார்க்கும் வண்ணம் நடனப் போட்டி ஆரம்பமானது.
ஊர்த்துவ தாண்டவம் என்றால் காலை மேலே தூக்கி ஆடுவது - இதனை 'லலாட திலகம்' என்று கூறுவார்கள். அதாவது காலைத் தூக்கி நெற்றியில் திலகமிடுவது எனப் பொருள். காதுக் குழையை காலால் கழற்றி அணிந்தது - இந்த ஸ்தலத்தில்தான்.
ஊர்த்துவ தாண்டவம் ஆட முடியாத காளி, தனது தோல்வியை ஒப்புக் கொண்டாள். ஆலயத்தின் இடது பக்கம், காளிக்கு இடம் தந்து, அவளுக்கு பூஜை செய்த பிறகே, தனக்கு பூஜை செய்ய வேண்டும் என்று நிபந்தித்தார் சிவபெருமான். இத்தலத்தில், சுனந்தன முனிவர்க்கு சண்ட தாண்டவம் ஆடிக் காட்டினார். எல்லா வகையான தாண்டவங்களுக்கும் இதுவே மூலம் என்பர். உலகம் இயங்க வேண்டி இறைவன் நடிக்க வேண்டியதை விளக்கும் நடனம் எனக் கூறுவர்.
சிவபெருமானது கங்கணமாயிருந்த கார்க்கோடகன், கையில் விஷத்தை கக்கியதால், சாபம் பெற்று, விமோசனம் வேண்டி, பூலோகம் வந்தான். இவ்விறைவனை வழிபட வந்த இடத்தில், சுனந்த முனிவருடன் சேர்ந்து, இந்த நடனத்தை காணும் பாக்கியம் கிட்டியது.
சுனந்த முனிவர் தவம் செய்து கொண்டிருக்கையில், அவர் மீது புற்று ஒன்று உண்டாகி, முனிவர் மீது முஞ்சம்புல் முளைத்ததனால், அவருக்கு 'முஞ்சிகேசி' என்ற பெயர் உண்டானது.
எப்போதும் இறைவனின் நாட்டிய தரிசனம் தனக்கு கிடைக்க வேண்டும் என வேண்டிய காரைக்கால் அம்மையாருக்கு, அவ்வாறே வரமளித்தார் சிவபெருமான். நடராஜருக்கு பின்புறமாக சந்நிதி கொண்டு அதில் ஐக்கியமானார் காரைக்கால் அம்மையார். இங்கிருந்தபடியே திருநடனத்தை தரிசித்துக் கொண்டு இருப்பதாக ஐதீகம்.
கோவிலின் மேற்கே முக்தி தீர்த்தம் எனும் குளமும், அதன் வடகிழக்கு மூலையில் பத்ரகாளி கோவிலும் உள்ளன. காளியை முதலில் வழிபட்டு பின்னர் ஆலங்காட்டு அப்பனை வணங்க வேண்டும்.