இரண்யவதம் முடித்த நரசிம்மரின் கோர ரூபத்தைக் கண்டு பயந்த மஹாலட்சுமி, பூலோகத்தில் வந்து ஒளிந்து கொண்டாள். விஷ்ணு மூர்த்தி லட்சுமியை விட்டு பிரிந்திருக்க நேரிட்டது. இந்த நடுக்கமும் பயமும் தீர மஹாலட்சுமி, சிவபூஜை செய்து பயத்தை போக்கிக் கொண்ட ஸ்தலம். லட்சுமி வழிபட்டதால் இவ்விறைவனுக்கு லட்சுமிபுரீஸ்வரர் என்றுப் பெயர் வந்தது.
தண்ணீரில் தெரிந்த கந்தர்வன் ஒருவனின் அழகை கண்டு வியந்த, மனைவி ரேணுகாவின் தலையை வெட்டி எடுக்குமாறு பிள்ளை பரசுராமரிடம் கட்டளையிடுகிறார் ஜமதக்னி முனிவர். தந்தையின் உத்தரவுப்படி தாயின் தலையை வெட்டி விடுகிறார் பரசுராமன். பின் தந்தையிடம் வரம் பெற்று இழந்த தாயை மீண்டும் பெறுகிறார். இந்த தோஷம் போக இத்தலத்திற்கு வந்து ஸ்வாமியை வழிபட்டார் பரசுராமர். அவசரப்பட்டு உத்தரவிட்டதற்கு வருந்தி மன்னிப்பு கேட்டு இவ்விறைவனை வழிபடுகிறார் ஜமதக்னி. இவ்விருவருக்கும் காட்சி தருகிறார் இறைவன் என ஸ்தல வரலாறு.
சோழ மன்னன் ஒருவன் தினமும் இவ்வூரின் வழியாக சிதம்பரம் சென்று நடராஜரை தரிசித்துவிட்டு வருவதை வழக்கமாக கொண்டவன். உடன்வரும் காவலாளிகள் எடுத்து செல்லும் தீபத்தின் திரி இவ்வூரை கடக்கும் சமயத்தில் அணைந்து விடுமாம். எவ்வளவு முயன்றும் எரியாதாம். இவ்வூரைக் கடந்ததும் மீண்டும் எரியுமாம். இதன் காரணத்தை அறிய முற்பட்ட மன்னன், பசு ஒன்று ஒரு புதரில் பால் சொரிவதைக் கண்ணுற்று புதரை தன் வாளால் விலக்கி பார்த்தான். சிவலிங்கம் ஒன்று இருப்பதையும் வாள் நுனி பட்டு ரத்தம் பெருகுவதையும் கண்டு, மனம் வருந்தி, அந்த லிங்கத்தை வெளிக் கொணர்ந்து பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக ஸ்தல வரலாறு மேலும் கூறுகிறது. திரி நின்ற ஸ்தலம் என்பதால் திரிநின்றியூர் என அழைக்கப்பட்டு, பின் லட்சுமி வழிபட்டதால் திருநின்றியூர் என்றானதாக கூறப்படுகிறது.
இங்கு மஹாலட்சுமி ஹோமம் நடத்தி, ஸ்வாமிக்கு சந்தனக் காப்பு செய்து, மாதுளை முத்துக்களால் அலங்கரித்து வழிபடுகின்றனர். அட்சய திருதியை அன்று ஸ்வாமியை வழிபடுவது கூடுதல் விசேஷம்.
தேவாரத்திருத்தலம்