ஒரு சமயம், குழப்பமும் சஞ்சலமும் கொண்டிருந்த வசிஷ்டர் மனம் அமைதி கொள்ள, க்ஷேத்ராடனம் புறப்பட்டார். ஒவ்வொரு ஸ்தலமாக வழிபட்டுக் கொண்டிருக்கையில், இங்குள்ள நெல்லிவனத்தில் தங்கி இருந்தபோது, அன்றைய தினம் சனிப்பிரதோஷ தினம் என ஞாபகப்படுத்தி, ருத்ர ஜபம் செய்யுமாறு அசரீரி ஒலித்தது.
இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி, கரையிலமர்ந்து ஒரு கோடி முறை ருத்ர ஜபம் செய்தார் வசிஷ்டர். சனிக்கிழமையும் பிரதோஷ வேளையும் கூடிய சுப நேரத்தில் மேற்கொண்ட ருத்ர ஜபம், அவருக்கிருந்த மனக்குழப்பத்தையும் சஞ்சலங்களையும் விடுவித்தது. அந்த சந்தோஷத்தில் பெரிய வேள்வி ஒன்றையும் நடத்தினார். அவருக்கு பிரத்யட்சமான சிவபெருமான் அருளாசி வழங்கினார் என ஸ்தல புராணம் கூறுகிறது.
தட்ச யாகத்தை அழித்திட கோடி ருத்ரர்களாகவும், பின் விஸ்வரூபமாகவும் சிவபெருமான் வந்த ஸ்தலம் என்பதாலும், வசிஷ்டர் கோடி முறை ருத்ர ஜபம் செய்ததாலும் ருத்ரகோடீஸ்வரர் என்ற திருநாமம் கொண்டார்.
சிவ வேள்விகள் நடத்துவதற்காக வேதியர்களுக்கு அரசனால் தானமாக தரப்பட்ட ஊர் என்பதாலும், பெரிய வேள்வி ஒன்றை வசிஷ்டர் நடத்தியதாலும், இவ்வூர் வேள்விக்குடி எனப் பெயருற்று, பின்னர் மருவி வேளுக்குடி என்றானதாகக் கூறப்படுகிறது.
பட்சப் பிரதோஷம் - நித்யப் பிரதோஷம் ஆகிய இரண்டின் சங்கமத்தின் இடைப்பட்ட நேரமே பிரதோஷ அமிர்த கடிகை நேரம் என்பது சித்தர்களின் கோட்பாடு. பித்ருக்கள் தினமும் பாதபூஜை செய்யும் சித்தர், காக்கைகளின் குலகுரு என்றெல்லாம் போற்றப்படும் சனிப்பரணி சித்தர் என்பவர், 1008 அமிர்த கடிகை நேரத்தில், 1008 திரிதினச் சனிப் பிரதோஷ வழிபாடுகளை செய்த ஸ்தலம்.
நந்தி தேவரும், சாண்டில்ய முனிவரும் பிரதோஷ வழிபாடு நடத்திய ஸ்தலம். இரண்டாம் குலோத்துங்கன் வெப்ப நோயால் அவதியுற்று, இவ்வூர் வந்து, ருத்ர தீர்த்தத்தில் நீராடி, நீலோத்பல மலர்களால் அர்ச்சித்து, இவ்விறைவனை வழிபட்டு நோய் நீங்கப் பெற்ற ஸ்தலம்.