ராம-ராவண யுத்தத்தில் ராமரின் அம்பு பட்டு, ராவணனின் உடம்பிலிருந்து சொட்டிய ரத்தத்திலிருந்து, இரக்த பிந்து, இரக்த ராட்சஸன் எனும் இரண்டு ராட்சஸர்கள் தோன்றினர். அவர்களையும் அழித்தால்தான் யுத்தம் பூர்த்தியாகும் என நாரதர் தெரிவிக்கின்றார்.
தான் அயோத்திக்கு போகவில்லை என்றால் பரதன் தீக்குளித்து இறப்பான் என்ற நிலை இருந்ததால் இராமனால் போக இயலவில்லை. அதனால் இந்த இரண்டு ராட்சஸர்களையும் கொல்லுமாறு, ஆஞ்சநேயரிடம் பணித்தார்.
ஒவ்வொரு தெய்வத்திடமிருந்தும் ஆயுதங்களைப் பெற்றுக் கொண்ட ஆஞ்சநேயர் சிவபெருமானிடமிருந்து மூன்றாவது கண்ணைப் பெற்றுக் கொண்டு, விஸ்வரூபம் எடுத்து சென்று இரண்டு ராட்சஸர்களையும் வதைத்து வெற்றி கண்டு திரும்புகையில், இங்கு சிறிது நேரம் இளைப்பாறினார் என ஸ்தல வரலாறு.
வடை, பழம், துளசி, வெற்றிலை, மலர் ஆகிய ஐந்து பொருட்களைக் கொண்டு தயாரித்த பஞ்ச மாலை சாத்தி வழிபடுவது மிகுந்த பயன் தரும் என பட்டர் தெரிவிக்கின்றார். அமாவாசை நாட்களில் கூட்டம் நிரம்பி வழியும்.
இராமபிரானின் கட்டளையை நிறைவேற்றிய ஆனந்தத்தில் இங்கு தங்கி இருந்ததால் இந்த ஊருக்கு ஆனந்த மங்கலம் எனப் பெயர் வந்தது. தற்போது அனந்த மங்கலம் என்றானது.