இது ஒரு குடைவரைக் கோவில். 160 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும். மலைக் கல்லில் குடையப்பட்ட கருவறை.
மூன்று வாசல்களையுடைய பிரதான கருவறையில் மூலவரான ஸ்ரீ ரங்கநாதர் சயனத் திருக்கோலத்தில், ஆதிசேஷன் மீது சயனித்து சேவை சாதிக்கின்றார். 23 அடி நீள அழகிய திருமேனி. தெற்கே சிரசும் வடக்கே பாதங்களும் கொண்டு சயனித்துள்ளார். ஒருபுறமாக முகத்தைத் திருப்பிக் கொண்டுள்ளார். நாபிக்கமலத்தில் கிளைத்தெழுந்த தாமரையில் பிரம்மா, திருமார்பில் லட்சுமி, சுற்றிலும் ஆயுத தேவதைகள், நாரதர், பிரஹ்லாதன், மார்க்கண்டேயர், ப்ருகு மற்றும் கருடன் ஆகிய திருவுருவங்களை சேவிக்கலாம்.
உற்சவ மூர்த்தியான ரங்கநாதர் ஸ்ரீதேவி - பூதேவி தேவியர்கள் சஹிதம் சேவை சாதிக்கின்றார். சதுர்புஜங்களுடன் கூடிய அழகான திருமேனி கொண்டு நின்ற திருக்கோலத்தில் காணப்படுகின்றார்.
மற்றைய உற்சவ மூர்த்திகளாக ஸ்ரீதேவி - பூதேவி சமேத ஸ்ரீநிவாசப் பெருமாள், சீதா - லக்ஷ்மண - ஹனுமத் சமேத ஸ்ரீராமபிரான், ஆண்டாள், உடையவர், தேசிகர், திருமங்கை ஆழ்வார், ரங்கநாயகித் தாயார், சக்கரத்தாழ்வார் மற்றும் கண்ணன் ஆகியோரை சேவிக்கலாம்.
ஸ்ரீ ரங்கநாயகி தாயார், லட்சுமி வராஹ ஸ்வாமி, ஸ்ரீதேவி பூதேவி உடனாய வரதராஜர் ஆகியோரை தனித்தனி சந்நிதிகளில் சேவிக்கலாம். சிறிய சந்நிதி ஒன்றில் ஸ்ரீ துர்கா தேவி எழுந்தருளியுள்ளார். ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகர் சிலாரூபியாக தரிசனம் தருகின்றார்.