மூலவர்: ஸ்ரீ பூர்வ ரங்கநாதர், உற்சவர்: ஆயனார், தாயார்: ஸ்ரீ பூர்வ ரங்கநாயகி, உற்சவத்தாயார்: அதிரூப வல்லி.
மூலஸ்தானத்தில் ஸ்ரீ பூர்வ ரங்கநாதர் யோக சயனமாக ஆதிசேஷன் மீது தென் திசை நோக்கி சயனித்து சேவை சாதிக்கின்றார். அரங்கனின் நாபியில் பிரம்மா இல்லை. பூமா தேவியும், மார்க்கண்டேயரும் உடன் எழுந்தருளியுள்ளனர்.
உற்சவ மூர்த்தி ஆயனார் உற்சவத் தாயார்களான ஸ்ரீ தேவி - பூதேவி தேவியர்களுடன் சேவை சாதிக்கின்றார்.
பேரெழில் கொண்ட விக்ரஹங்கள்.
மூலஸ்தானத்திற்கு சற்று முன்பாக ஸ்ரீ கஸ்தூரி ரங்கர் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளி சேவை சாதிக்கின்றார்.
சோபன மண்டபத்தின் வலதுபுறமாக தாயார் ஸ்ரீ பூர்வ ரங்கநாயகித் தாயாரும், உற்சவத் தாயார் அதிரூபவல்லியும் தனி சந்நிதி கொண்டுள்ளனர். குழந்தை பாக்கியம் வேண்டி பிரார்த்தனை செய்பவர்கள் தங்களுக்கு வளைகாப்பு வைபவம் நடக்கும்போது, தாயாருக்கு வளைகாப்பு நடத்துகின்றனர். தாயார் சந்நிதி போலவே ஆண்டாள் சந்நிதியும் இருக்கின்றது.
ராமர் சந்நிதியும், கிருஷ்ணர் சந்நிதியும் வலம் - இடமாக உள்ளது. தெற்கு பிரகாரத்தில் ராமர் பாதம் உள்ளது. ராமருடன் சுக்ரீவனும் எழுந்தருளியுள்ளார். ருக்மணி - சத்யபாமா சஹிதமாக கோபால கிருஷ்ணன், நர்த்தன கிருஷ்ணன், சந்தான கிருஷ்ணன் ஆகிய அழகிய மூர்த்திகளையும் பஞ்சலோக விக்ரஹங்களையும் சேவிக்கலாம். ஆழ்வார்கள், விஷ்வக்சேனர், பால ஆஞ்சநேயர் என அநேக மூர்த்திகள் இருக்கின்றனர்.