காஸ்யப முனிவரின் பத்தினிகளான கத்ரு மற்றும் வினதை இருவருக்கும் ஏற்பட்ட போட்டியில் வினதை தோற்கிறாள். இத்தலத்திற்கு வந்து மேகநாதஸ்வாமியை வழிபடுகிறாள் வினதை. வினதையின் அவசர புத்தியினால் அருணன் அங்கஹீனனாகப் பிறக்கிறான். கத்ருவுக்கு கருடன் பிறக்கிறான். அருணன் சூரியனின் சாரதி ஆகிறான்.
சிவலோகத்தைக் காணும் ஆசையில் உள்ள அருணனுக்கு, சூரியனின் அனுமதி கிடைக்காததால், பெண் வடிவம் கொண்டு போகிறான் அருணன். சூரியனால் மோகிக்கப்படுகிறான். சூரியனால் மோகிக்கப்பட்டு சுக்ரீவனும், இந்திரனால் மோகிக்கப்பட்டு வாலியும் பிறக்கின்றனர். அருணனுக்கு சூரியன் இழைத்த அநீதியினால், சிவபெருமானின் சாபத்திற்கு ஆளாகி தனது ஒளியை இழந்து, மேனி கருகி, விகாரமடைகிறான் சூரியன்.
சாப விமோசனம் வேண்டி இத்தலத்திற்கு வந்து நீண்ட காலம் தவம் மேற்கொண்டான் சூரியன். மேனியின் நிறம் பழைய நிலை திரும்பாததால் வாய் விட்டு அலறி ஓலமிட்டான். தமது ஏகாந்தத்தைக் கலைத்துவிட்டான் சூரியன் என கோபம் கொண்ட அம்பிகை சூரியனை சபிக்க முற்பட்டாள். அவன் ஏற்கனவே சாபத்தால் அவதியுறுவதையும், அதனால் ஓலமிட்டான் எனவும், அம்பிகையிடம் எடுத்துக் கூறி சாந்தப்படுத்துகிறார் சிவபெருமான். அம்பிகையின் முகவாய்க்கட்டையைப் பிடித்துக்கொண்டு அவளை சாந்தமாக இருக்க வேண்டும் என்ற காட்சியைத்தான் விமானத்தின் கீழ் தெற்கு திசையில் சிற்பமாக வடித்துள்ளனர்.
சனீஸ்வரர், யமதர்மன், அருணன், கருடன், வாலி, சுக்ரீவன் ஆகியோர் அவதரித்த ஸ்தலம் என்ற பெருமைகளைக் கொண்ட ஸ்தலம் இது.
இவ்விறைவனை 1008 சங்காபிஷேகம் செய்து வழிபட்டுள்ளான் யமன். பிரண்டை சாதம் நைவேத்யம் செய்து வழிபட்டுத் தான் நீண்ட ஆயுளுடன் இருக்க வரமருளுமாறு வேண்டினான் யமதர்மராஜன். எனவே இங்கு உச்சி வேளையில் ஸ்வாமிக்கு பிரண்டை அன்னம் நைவேத்யம் செய்கின்றனர். இந்த பிரசாதத்தை உண்டால் ஆயுள் கூடும் என ஐதீகம்.
சண்ட-முண்டாசுரர்களை வதம் செய்த தோஷம் நீங்கிட அன்னை இங்கு தவமிருந்தாள்.
அகஸ்தியரும் லோபமுத்திரையும் இத்தலத்திற்கு வந்து ஹயக்ரீவர் - அகஸ்தியருக்கு உபதேசித்த லலிதா சஹஸ்ரநாம மந்திரத்தை ஜபித்து வழிபட்டுள்ளனர். அன்னையை வர்ணித்து ஸ்ரீ லலிதா நவரத்னமாலை ஸ்தோத்திரம் பாடியுள்ளனர் என குறிப்பொன்று தெரிவிக்கின்றது.
கர்நாடகாவைச் சேர்ந்த மைதிலி எனும் பெண்மணியின் கனவில் தோன்றிய லலிதாம்பிகை, தனது காலுக்கு கொலுசு வேண்டும் எனக் கேட்டிருக்கிறாள். அப்பெண்மணி இக்கோவிலுக்கு வந்து, அர்ச்சகரிடம் விசாரித்ததில், கொலுசு அணிவிக்க வசதியில்லை எனக் கூறிவிட்டார் அர்ச்சகர். வசதியில்லை என்றால் எனது கனவில் வந்து அன்னை கேட்டது எப்படி என்று அப்பெண்மணி வினவினாள். பின்னர் அர்ச்சகர் தேடிப் பார்த்ததில் சிலையின் பாதத்தில் துவாரம் தென்பட்டது. அதை அபிஷேகப் பொருட்கள் அடைத்துக் கொண்டிருந்தன. அடைபட்டவற்றை நீக்கி அந்த துவாரத்தில் கொலுசை மாட்டினார் அர்ச்சகர்.
பௌர்ணமி தினங்களில் தங்க கொலுசு அணிந்து நடக்கும் பாணியில் தரிசனம் தருகின்றாள் அன்னை. விஜயதசமியன்று மாலை விசேஷ அலங்காரங்கள் செய்வார்கள். அப்போது மூன்று மூட்டை அரிசியில் சர்க்கரைப் பொங்கல், புளியஞ்சாதம், தயிர் சாதம் போன்ற நைவேத்யங்களை செய்வார்கள். சர்க்கரைப் பொங்கலில் குளம் போல் அமைத்து மூன்று டின் நெய் ஊற்றி வைத்திருப்பார்கள். தூபதீபம் காட்டும் சமயத்தில் திரை விலக்கப்படும்போது இந்த படையலைக் காணலாம். குளம் போலுள்ள நெய்யில் அம்பிகையின் திருவுருவம் பிரதிபலிக்கும் அழகைக் காணலாம்.
தை மாதத்தில் ரதசப்தமி கொண்டாடுகிறார்கள். ரத சப்தமியன்று இங்கு எருக்கம்பூ, இலை, பஞ்சகவ்யம், அட்சதை வைத்து சங்கல்பம் செய்துகொண்டு, சூரிய புஷ்கரிணி குளத்தில் நீராடினால் ஏழேழு ஜென்மப் பாவங்களும் தொலையும் என்று ஐதீகம்.
சிவனுக்குரிய எல்லா விழாக்களும் சிறப்புறக் கொண்டாடுகின்றனர்.
நவராத்திரி, விஜயதசமி மற்றும் மாசி மாதத்து அஷ்டமி தினம் ஆகிய மூன்று நாட்களிலும் ஸ்ரீ லலிதாம்பிகைக்கு அன்னப்பாவாடை சாத்தும் வைபவம் நடைபெறுகிறது.
இது தேவாரத் திருத்தலங்களுள் ஒன்று, மேலும் சக்தி பீடங்களுள் ஒன்றாகவும் விளங்குகிறது.