மதுரை மாநகர் சென்று, சொக்கநாதரை தரிசிக்கும் வழக்கம் கொண்ட குண்டையூர் கிழாருக்கு, ஒரு சமயம் பெரு மழை காரணமாக தரிசிக்க இயலாமல் போனதால் வருத்தமுற்றார். அவரது வருத்தத்தைப் போக்க, குண்டையூருக்கே தான் மீனாட்சியுடன் வந்து தரிசனம் தருவதாக கூறினார் சொக்கநாதர்.
சான்றாக இரண்டு ஆத்தி மரங்களும் ஒரு வன்னி மரமும் கோவிலிலும் ஒரு வன்னியும் ஒரு ஆத்தியும் குளக்கரையிலும் நிற்கக் காண்பாய் எனக் கூறினார் சிவபெருமான். அதன்படியே நடந்தது.
சிவ பக்தனான பெருநில வேளாளர் குண்டையூர் கிழார், சுந்தரர் மீது பேரன்பு கொண்டவர். சுந்தரர்க்கு வேண்டிய நெல் மற்றும் விளை பொருட்களை தவறாது அனுப்பும் வழக்கம் கொண்டவர். மழையின்மை காரணமாய் நெல் அனுப்ப முடியாமல் போனதிற்காக மிகவும் வருந்தினார் குண்டையூர் கிழார். குண்டையூர் முழுவதும் நெல்லை மலையாகக் குவித்து வைத்துவிட்டு, இது சுந்தரருக்காக கொடுத்தது எனக் கனவில் தோன்றி கூறினார் இறைவன்.
சுந்தரரை அழைத்து வந்து, நெல் மலையைக் காட்டி எடுத்துக் கொள்ளச் சொன்னார் குண்டையூர் கிழார். இவற்றை மனிதனால் எடுத்துச் செல்ல முடியாதே, என் செய்வேன்? என்று பதிகம் பாடினார் சுந்தரர். இரவோடு இரவாக பூத கணங்களை அனுப்பி, நெல் மலையை எடுப்பித்துக் கொண்டு சுந்தரின் வீடு சேர்த்தார் இறைவன் என ஸ்தல வரலாறு.
மாசி மாத பூர நட்சத்திரத்தில் நெல் மஹோற்சவ விழா கொண்டாடுகின்றனர். இந்த நெல் கிடைக்கப் பெற்றவர்களின் இல்லங்களில் வறுமை இருக்காது என ஐதீகம்.